• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அம்பாறையில் அழியும் நிலையில் சிவன் ஆலயம் - புத்தர் வரும் முன் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

சினிமா

ஆலயம் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது ஆன்றோர் வாக்கு. இந்நிலையில்  அம்பாறை   ஆலங்குளம் பகுதியில் அமைந்துள்ள 11ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலச் சிவன் ஆலயம் தொடர்பில்  விரைந்து நடவடிக்கை  எடுக்குமாறு சமூர்க ஆர்வலர்களால்  கோரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் பூர்வீக வரலாற்றுத் தடயங்கள் திட்டமிட்ட முறையில் சிதைக்கப்பட்டு வரும் சூழலில், அம்பாறை மாவட்டத்தின் ஆலங்குளம் பகுதியில் அமைந்துள்ள 11ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலச் சிவன் ஆலயம் ஒன்று அடையாளச் சிதைவு மற்றும் இயற்கை அழிவுகளை எதிர்நோக்கி நிற்கின்றதாக சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஈழத்துத் தமிழர்களின் செழுமையான வரலாற்றைச் சொல்லும் சோழர் காலத்துச் ஆலங்குளம் சிவன் ஆலயம் தொடர்பில்   நடவடிக்கை எடுப்பதுடன், ஆலயத்தை பாதுகாக்குமாரும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனையிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காட்டுப் பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலயம் குறித்து, கிழக்கு பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ். சிவகணேசன் தலைமையிலான ஆய்வுக்குழு விரிவான கள ஆய்வுகளை மேற்கொண்டது.

இந்த ஆய்வின் மூலம் இவ்வாலயம் 11ஆம் நூற்றாண்டில் ஈழத்தில் நிலவிய சோழர் காலத் திராவிடக் கட்டிடக்கலைப் பாணியை (Chola Style Architecture) ஒத்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரு முழுமையான சிவன் கோயிலுக்குரிய அங்கங்களான கர்ப்பக்கிரகம் (கருவறை), அந்தராளம், முன் மண்டபம், பலிபீடம் மற்றும் கொடிக்கம்பம் ஆகியவற்றின் எச்சங்கள் இன்றும் அங்கு அடையாளப்படுத்தக்கூடிய நிலையில் உள்ளன.

குறிப்பாக, கருவறை உருவாக்கத்திற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள மிகச் சிறிய வகைச் செங்கற்கள் சோழர் காலத்துத் தொழில்நுட்பத்திற்குச் சான்றாக அமைந்துள்ளன.

தொல்லியல் திணைக்களத்தின் முரண்பாடான பதிவு இலங்கை அரசாங்கத்தின் தொல்லியல் திணைக்களத்தினால் கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் திகதி வெளியிடப்பட்ட 1884 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் மூலம் ஆலங்குளம் பகுதி பாதுகாக்கப்பட்ட புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டது.

எனினும், இந்த வர்த்தமானியில் குறித்த இடம் "புராதன சேத்தியா" (Chaithya) மற்றும் அதனைச் சூழவுள்ள இடிபாடுகள் என பதிவிடப்பட்டுள்ளது.

தெளிவான சைவக் கோயில் அடையாளங்கள் (கருவறை, அந்தராளம்) இருந்தபோதிலும், இதனை ஒரு பௌத்த வழிபாட்டுத் தலமாக அடையாளப்படுத்தியிருப்பது ஒரு திட்டமிட்ட வரலாற்றுத் திரிபு என ஆய்வாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்வாறான தவறான பதிவுகள் காலப்போக்கில் ஒரு இனத்தின் பூர்வீக அடையாளத்தை முழுமையாக மறைக்க வழிவகுக்கும் என அவர்கள் எச்சரிக்கின்றனர்.

பூர்வீகத்தை உறுதிப்படுத்தும் கல்வெட்டுச் சான்றுகள் இந்த ஆலயத்திற்கு அண்மித்த குடுவில் (Kuduvil) மலையில் கண்டெடுக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டுக்கள் 2,200 ஆண்டுகளுக்கு முற்பட்டவை.

இக்கல்வெட்டில் 'தமில' (Damila) என்ற சொல் நேரடியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது இப்பகுதியில் மிக நீண்டகாலமாகத் தமிழர்களின் பூர்வீகக் குடியேற்றங்களும், சைவ வழிபாட்டு முறைகளும் நிலவியதை அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்துகின்றன.

தற்போதைய அவல நிலை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக்கோயில் தற்போது இயற்கை மற்றும் மனித நடவடிக்கைகளால் அழிந்து வருகின்றது.   பாரிய ஆலமரங்களின் வேர்கள் கட்டிடத்தின் இடுக்குகளில் புகுந்து கர்ப்பக்கிரகத்தை மெல்ல மெல்லப் பிளந்து வருகின்றன.

  புதையல் வேட்டைக்காரர்களால் ஆலயத்தின் பீடங்கள் தோண்டப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன. இதனால் கட்டிடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.

பராமரிப்பின்றிப் புதர் மண்டிக்கிடப்பதால், இடிபாடுகளுக்கு இடையே விசப்பாம்புகளின் புகலிடமாக இது மாறியுள்ளது. எனவே ஈழத்துத் தமிழர்களின் செழுமையான வரலாற்றைச் சொல்லும் இந்த ஆலங்குளம் சிவன் ஆலயத்தின் உண்மையான அடையாளத்தை வர்த்தமானியில் திருத்தம் செய்து, அதனை உடனடியாகப் பாதுகாக்க வேண்டியது வரலாற்று ஆய்வாளர்களினதும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளினதும் உடனடிப் பொறுப்பாகும் என்றும் சமூக ஆர்வலர்கள் சுட்டிகாட்டியுள்ளனர்.    
 

Leave a Reply