பிரித்தானியா வேல்ஸ் இல் வீட்டின் பிரீசருக்குள் பெண்ணின் சடலம் - பொலிஸார் ஷாக்
பிரித்தானியாவின் வேல்ஸ் (Wales) பகுதியில் உள்ள போர்த்கால் (Porthcawl) என்ற இடத்தில், ஒரு வீட்டின் பிரீசருக்குள் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 17) மதியம், அந்த வீட்டில் வசிக்கும் ஒரு பெண்ணின் நலம் குறித்து போலீசாருக்கு வந்த தகவலைத் தொடர்ந்து, அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தினர்.
அப்போதுதான் பிரீசருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்த பெண்ணின் உடல் மீட்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை தெற்கு வேல்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் உடலை முறைப்படி அடக்கம் செய்யாமல், அதனை சட்டத்திற்குப் புறம்பாக மறைத்து வைத்ததாக (preventing a lawful burial) அவர் மீது சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
கைதான சந்தேக நபர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கைதான நபருக்கும் உயிரிழந்த பெண்ணுக்கும் இடையே என்ன உறவு என்பது குறித்து போலீசார் இன்னும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை.
வீட்டைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், தடயவியல் நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த பெண் எப்போது இறந்தார், அவர் எப்படி பிரீசருக்குள் வைக்கப்பட்டார் என்பது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
அதேவேளை பிரித்தானியாவில் இது போன்ற சம்பவங்கள் அரிதாகவே நடக்கின்றன. இதற்கு முன்னரும் இதே போன்ற ஒரு சம்பவத்தில், தனது தாயின் இறப்பை மறைத்து பென்ஷன் பணத்தைப் பெறுவதற்காக உடலை பிரீசரில் வைத்த நபருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.






















