அரசாங்க அதிபரின் சேவை இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
இலங்கை
பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து, மாவட்ட அரசாங்க அதிகாரிகள், அரச சேவையாளர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் உறுப்பினர்கள் இணைந்து பதுளை மாவட்ட செயலகத்துக்கு முன்பாக, இன்று (17) அமைதியான முறையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், மாவட்ட அரசாங்க அதிபரை அவசரமாக இடமாற்றம் செய்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத முடிவாகும் என்று தெரிவித்தனர்.
கடந்த காலங்களில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்த பதுளை மாவட்டத்தில், மாவட்ட அரசாங்க அதிபரால் முன்னெடுக்கப்பட்ட சேவைகள் மிகவும் பாராட்டத்தக்கவை. இதனால் அவரது இடமாற்ற உத்தரவை உடனடியாக ரத்து செய்து, அவரை மீண்டும் பதுளை மாவட்டத்தில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
அத்தோடு, பொதுமக்களும் அவருடைய சேவை தொடர்ந்தும் பதுளை மாவட்டத்திலேயே நீடிக்க வேண்டும் எனக் கோரி வேண்டுகோளை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.























