அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் மீண்டும் திறப்பு
இலங்கை
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத் தடைப்பட்டிருந்த 159 பிரதான வீதிகள் மீண்டும் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.
அதன்படி, A-004: கொழும்பு – இரத்தினபுரி – வெல்லவாய – மட்டக்களப்பு வீதி , A-026: கண்டி – மகியங்கனை – பதியதலாவ வீதி, AA 006: அம்பேபுஸ்ஸ – குருநாகல் – திருகோணமலை வீதி , AA 010: கட்டுகஸ்தோட்டை – குருநாகல் – புத்தளம் வீதி , AA 003: பேலியகொட – புத்தளம் வீதி உள்ளிட்ட பல பிரதான வீதிகள் இதில் அடங்குகின்றன, வீதிப் பாதுகாப்பு மற்றும் மக்களின் அன்றாட நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காக, பராமரிப்பு மற்றும் புனரமைப்புப் பணிகளைத் துரிதப்படுத்த வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர் குழுக்களும் கள உத்தியோகத்தர்களும் இரவும் பகலும் தொடர்ந்து பணியாற்றி வருவதாக அவ்வதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, தற்போது மூடப்பட்டுள்ள ஏனைய வீதிகளையும் விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






















