
முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு அம்பாறையில் முன்னெடுப்பு
இலங்கை
முள்ளிவாய்க்கால் இனவழிப்பு வாரத்தினை முன்னிட்டு அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இன்று திருக்கோவில் தம்பிலுவில் பொதுச்சந்தைக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இறுதி யுத்தத்தின் போது உயிர் நீத்தவர்களின் நினைவேந்தல் நிகழ்வும் நடைபெற்றது.
இதன்போது விசேட பூஜைவழிபாடு இடம் பெற்றதோடு முள்ளிவாய்க்கால் தொடர்பான துண்டுப்பிரசுரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி காய்ச்சப்பட்டு சிரட்டையில் மக்களுக்கு பரிமாரப்பட்டது.
இந்நிகழ்வில் சங்கத்தின் ஆலோசகரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான தாமோதரம் பிரதீவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இன்று ஆரம்பமாகியுள்ள முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 18 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.