• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் தொழிலின்மைப் பிரச்சினை

இலங்கை

நாட்டில் 15 முதல் 29 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களில் 2 இலட்சத்து 63 ஆயிரத்து 274 பேர் தொழில் அற்றவர்களாக காணப்படுவதாக சனத்தொகை மதிப்பீட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார விஞ்ஞானம் மற்றும் புள்ளிவிபர ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள, 18 முதல் 24 வயதுக்கு இடைப்பட்ட ஒரு இலட்சத்து 52 ஆயிரத்து 606 பேர் தொழில் அற்றவர்களாக காணப்படுவதாகவும் 25 முதல் 29 வயதுக்கு இடைப்பட்டவர்களில் ஒரு இலட்சத்து 10 ஆயிரத்து 668 பேர் இந்த நிலையில் உள்ளார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் வேலையற்றவர்களுள் ஒரு இலட்சத்து 84 ஆயிரத்து 406 பேர் க.பொ.த. உயர்தரம் அல்லது அதனை விட அதிக தகைமைகள் உடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

க.பொ.த சாதாரண தரம் சித்தியடைந்த ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 234 பேர் உள்ளடங்கும் நிலையில் சித்தியடையாதவர்கள் 86,822 பேர் தொழில் இல்லாமல் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வேலையின்மை பெண்களிடையே அதிகமாக காணப்படுவதாகவும், பெண் தொழிலாளர் பங்கேற்புகள் குறிப்பிடத்தக்களவில் குறைவடைந்துள்ளதாகவும் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

எனவே, இளைஞர்கள் மத்தியில் பிரதான சிக்கலாக மாறியுள்ள தொழிலின்மையை குறைப்பதற்காக அரசாங்கம் செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, அதிக கல்வியறிவு உள்ளவர்களிடையே காணப்படும் தொழிலின்மையை குறைக்கும் நோக்கில் புதிய அரசாங்கம் மூலம் அவசியமான கொள்கைகளை முன்வைக்க வேண்டும் எனவும் பேராசிரியர் வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறு இல்லையெனில், இளைஞர்கள் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு வழங்கப்படும் பங்களிப்பு கிடைக்காத அதேவேளை, நாட்டில் உள்ள அறிவுள்ள திறமையான இளைஞர்களை சமூகத்திற்கு பிரயோசனமானவர்களாக உருவாக்க வாய்ப்புகள் கிடைக்காது எனவும் இதனால், சமுதாயத்திற்கான இழப்பு அளப்பரியது எனவும் பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள சுட்டிக்காட்டினார்.
 

Leave a Reply