• Welcome to TamilsGuide
செய்திகள் 1

IMF இன் கடன் ஒப்பந்தத்தின் பின்னரே நாடு சுவாசிக்கத் தொடங்கியது

இலங்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டத்திற்குப் புறம்பாக செயற்பட எவரேனும் கனவு கண்டால், இந்த நாடு மீண்டும் வீழ்ச்சியடைவதைத் தடுக்க முடியாது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  நாட்டில் கடந்த காலங்களில் திறைசேரியில் டொலர் கையிருப்பு இருக்கவில்லை. நாட்டினால்  கடனைத்  திருப்பிச் செலுத்த முடியவில்லை. எரிபொருள் மற்றும் எரிவாயுக்கான வரிசைகள் உருவாகின. சமூகம் முழுமையாக வெறுப்புக் கலந்த சமூகமாக மாறி, நாடு முழுவதும் போராட்டங்கள் ஏற்பட்டன.

நாட்டைப் பொறுப்பேற்க எவரும் முன்வராத வேளையில், பிரதமராகவும், முதிர்ந்த அரசியல்வாதியாகவும் அனுபவம் வாய்ந்த ரணில் விக்ரமசிங்க அந்தச் சவாலை ஏற்று நாட்டை ஸ்திரப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்தார்.

அவர் செய்த முதல் விடயம், சர்வதேச நாணய நிதியத்திற்குச் சென்று நீடிக்கப்பட்ட கடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதுதான். அதனை வெற்றியடையச் செய்ய பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். ஒரு நாடு என்ற வகையில் இதற்கு முன்னர் 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்திற்குச் சென்றிருந்ததால், இம்முறை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட முறையில் கடன் வசதியைப் பெற்றுக்கொள்வதற்கு மிகவும் கடுமையான முயற்சிகளில் ஈடுபட வேண்டியிருந்தது.

இதன் விளைவாக, 2027 ஆம் ஆண்டு வரை சர்வதேச நாணய நிதியத்துடன் நீடிக்கப்பட்ட கடன் ஒப்பந்தத்திற்குச் செல்ல முடிந்தது. சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஒப்பந்தத்தின் பின்னரே, நம் நாடு சுவாசிக்கத் தொடங்கியது எனலாம்.

அரசியல் ரீதியில் யார் தலைவராக இருந்தாலும் சர்வதேச அங்கீகாரம் கிடைக்காத பட்சத்தில் கொடுக்கல் வாங்கல்களைப் பேண முடியாது.

நீடிக்கப்பட்ட கடன் வசதி ஒப்பந்தத்தின்படி, 2027 ஆம் ஆண்டு வரை கடன் ஒப்பந்தத்தில் ஈடுபட முடிந்துள்ளது.
எனவே நாங்கள் வருடந்தோறும் பொருட்களை இறக்குமதி செய்ய முடியும். இன்னும் சில மாதங்களில், 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் தயாரிக்கப்படவுள்ளது.

வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டால்தான் அரச ஊழியர்களின் சம்பளம், சிரேஷ்ட பிரஜைகளுக்கான ஓய்வூதியம், சமுர்த்தி, அஸ்வெசும என்பன ஏழைகளுக்கு வழங்கப்படும். மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு இல்லாமல், வரவு-செலவுத்திட்டத்தை 2027 வரை தயாரிக்க முடியாது.

சர்வதேச நாணய நிதியம் 2025 வரவு செலவுத் திட்டத்திற்காக 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும்.
உலக வங்கி 400 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், ஆசிய அபிவிருத்தி வங்கி 300 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வரவுசெலவுத் திட்டத்திற்காக வழங்குகின்றது.

வரவு – செலவுத் திட்ட ஆவணம் தயாரிக்கும் போது மேலும் 3655 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் நிவாரணமாக கிடைக்கும் என நம்பப்படுகிறது. அடுத்த ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் இவ்வாறுதான் தயாரிக்கப்பட வேண்டும்.

தற்போது, 5.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே கையிருப்பில் உள்ளது. எவ்வாறாயினும், ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு முறையான திட்டத்தை நாங்கள் தயாரித்துள்ளோம். இவ்வாறானதொரு வேலைத்திட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்தும் அதேவேளை, ஜனாதிபதி வெளிநாடுகளுடன் உடன்படிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

இதில் எந்தவொரு ஒப்பந்தமும் வேலைத்திட்டமும் மறைக்கப்பட்டதல்ல. ஜனாதிபதி சகல தகவல்களையும் நாடாளுமன்றுக்கு சமர்ப்பித்துள்ளார். அந்தப் பின்னணியில், இந்த உருவாக்கப்பட்ட பொருளாதாரத் திட்டத்தைத் தவிர்த்து எவராலும் அரசாங்கத்தை நடத்த முடியாது.

இந்தப் பொருளாதாரத் திட்டத்திற்குப் புறம்பாக யாராவது ஆட்சி செய்ய வேண்டும் என்று கனவு கண்டால், நாடு மீண்டும் வீழ்ச்சியடைவதைத் தடுக்க முடியாது என்பதைக் கூற வேண்டும்” இவ்வாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
 

Leave a Reply