• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் இந்தியத் துணைத் தூதரகம் முன்பாக மீனவர்கள் போராட்டம்

இலங்கை

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்திய இழுவைப் படகுகளைக்  கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியத் துணைத் தூதரகம் முன்பாக இன்று யாழ். மாவட்ட மீனவர்கள் போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.

யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சமாசங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் சேன் பொஸ்கோ பாடசாலைக்கு அருகாமைலிலுள்ள மருதடிச் சந்தியில் இருந்து துணைத் தூதரகம் வரை பேரணியாகச் சென்ற யாழ். மாவட்ட மீனவர்கள், இந்தியத் துணைத் தூதரகம் முன்பாக குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது இந்திய இழுவை மடிப் படகுகளின் அத்துமீறிய நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் இதற்கு இலங்கை – இந்திய அரசாங்கங்கள் இணைந்து உரிய தீர்வொன்றை முன்வைக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோஷமெழுப்பினர்.

போராட்டத்தைத் தொடர்ந்து தங்களது கோரிக்கைள் அடங்கிய மகஜரொன்றையும் மீனவர் சங்கப் பிரதிகள் துணைத்தூதரகத்தில் கையளித்தனர்.

மீனவர்களின் போராட்டம் காரணமாக சுமார் இரண்டு மணி நேரம் மருதடி வீதி ஊடான போக்குவரத்தை பொலிஸார் தடை செய்து, வீதியின் குறுக்கே வீதி தடைகளை போட்டு பாதுகாப்பை பலப்படுத்தி இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply