டொராண்டோவில் திட்டமிட்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு - 3 சந்தேகநபர்களுக்கு பொலிஸார் வலைவீச்சு
கனடா
கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள நோர்த் யார்க் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களை டொராண்டோ பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் ஜேன் ஸ்ட்ரீட் மற்றும் ஷெப்பர்ட் அவென்யூ வெஸ்ட் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸாருக்கு பல அழைப்புகள் கிடைத்துள்ளன.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, 20 மதிக்கத்தக்க மூன்று இளைஞர்கள் துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் கண்டறியப்பட்டனர்.
அவர்களில் 22 வயதுடைய அப்திஹமீம் ஆதன் என்ற இளைஞர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் 2026 ஆம் ஆண்டில் டொராண்டோவில் பதிவான 18 ஆவது கொலைச் சம்பவம் இதுவாகும்.
காயமடைந்த மற்ற இரு இளைஞர்களும் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தற்போது அவர்களின் நிலைமை சீராக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச் சூடானது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி சான்ட்ரா அர்ருடா தெரிவித்துள்ளார்.
எனினும், இதற்கான காரணம் என்ன என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை. கருப்பு நிற ஆடைகள் மற்றும் முகமூடி அணிந்திருந்த மூன்று ஆண் சந்தேகநபர்கள், திருடப்பட்ட கருப்பு நிற ஹோண்டா சிவிக் காரில் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளனர்.
இந்த சந்தேகநபர்களின் கார் சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் பிராம்ப்டன் பகுதியில் தீப்பிடித்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளது. இக்கார் சில நாட்களுக்கு முன்பு நோர்த் யார்க் பகுதியில் திருடப்பட்ட ஒன்று என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்தில் வசிக்கும் செவிலியர் ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், சுமார் 6 துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாகவும், பின்னர் உதவி கேட்டு அலறிய சத்தம் கேட்டு தான் வெளியே வந்து காயமடைந்தவர்களுக்கு உதவ முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தக் கொடூரக் குற்றத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்ய பொலிஸார் அனைத்து வளங்களையும் பயன்படுத்தி தீவிர விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
சம்பவ இடத்தை கடந்து சென்ற வாகனங்களின் டேஷ்கேம் காட்சிகள் அல்லது தகவல்கள் ஏதேனும் இருந்தால், உடனடியாக தமக்கு வழங்கி உதவுமாறு டொராண்டோ பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.






















