• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சர்வதேச குற்றக்குழுவுடன் தொடர்புடைய கனடியர் பிரான்சில் கைது

கனடா

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தைச் சேர்ந்த 40 வயதுடைய கரீந்தர் சிங் தியோ என்ற நபர் பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI இன் "ஒப்பரேஷன் ஹார்ட் போல்" என்ற சர்வதேச ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு எதிரான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தற்போது அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்படுவதை எதிர்நோக்கிக் காத்திருப்பதாக கனடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சர்வதேச குற்றக் கும்பல்கள் மிரட்டி பணம் பறித்தல், போதைப்பொருள் கடத்தல், கடத்தல் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறிப்பாக, 2023 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவில் நடந்த சீக்கிய ஆர்வலர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலையுடனும் இக்குற்றக் கும்பலுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இக்குற்றக் குழுக்களுடன் தொடர்புடைய 24 சந்தேகநபர்களின் கைது விபரங்களை பொலிஸார் வெளியிட்ட சில நாட்களில், ஜூலை 7 ஆம் திகதி கரீந்தர் சிங் தியோ பிரான்சில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நான்காவது கனடியர் இவராவார். தியோ, அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் தொடர்புடைய இரு நிறுவனங்களுக்கு எதிராக சிவில் சொத்துப் பறிமுதல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோத வருமானம் மூலம் வாங்கப்பட்டதாகக் கூறப்படும் வெஸ்ட் வன்கூவர் மற்றும் பகுதிகளில் உள்ள மூன்று சொத்துக்களை பறிமுதல் செய்ய மாகாண அரசு முயன்று வருகிறது. 


 

Leave a Reply