H-1B விசாவுக்கான 60 நாள் சலுகைக் காலத்தை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா திட்டம்
To End 60-Day Grace Period For H-1B: H-1B விசாவுக்கான 60 நாள் சலுகைக் காலத்தை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா திட்டம்.
H-1B விசா பெற்ற திறன்மிக்க பணியாளர்கள் உட்பட குறிப்பிட்ட சில குடியேறிகள், வேலையை இழந்த பிறகு அமெரிக்காவில் தங்கி புதிய ஸ்பான்சரைத் (sponsor) தேடிக்கொள்ள அனுமதிக்கும் 60 நாள் கால அவகாசத்தை ரத்து செய்ய ட்ரம்ப் நிர்வாகம் முன்மொழிந்துள்ளது.
குறித்த நகர்வு தொடர்பில் வியாழக்கிழமையன்று ட்ரம்ப் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையால் 'ஃபெடரல் ரெஜிஸ்டர்' (Federal Register) இதழில் வெளியிடப்பட்ட விதிமுறை மாற்றத் திட்டத்தின்படி, H-1B மற்றும் பிற குறிப்பிட்ட தற்காலிகப் பணி விசாக்களைக் கொண்டவர்கள் தங்கள் வேலை முடிந்த உடனேயே நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருக்கும்; வெளிநாட்டு ஊழியர்களைப் பெருமளவில் சார்ந்திருக்கும் முன்னணி அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இது ஒரு பெரும் பின்னடைவாக அமையக்கூடும்.
ஜனவரி 2025-இல் மீண்டும் பதவியேற்ற பிறகு, சட்டப்பூர்வமான குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்துள்ள மிகச் சமீபத்திய நடவடிக்கை இதுவாகும்.
ட்ரம்ப் நிர்வாகம், திறமையான தொழிலாளர்களுக்கான விசா கட்டணங்களை உயர்த்தியுள்ளதுடன், ஒரு புதிய பயிற்சித் திட்டத்தைச் செயல்படுத்தும் பொருட்டு, சமீபத்தில் உலகெங்கிலும் உள்ள அமெரிக்கத் தூதரகங்களில் குடியேற்ற விசா சந்திப்புகளையும் இடைநிறுத்தியுள்ளது.
இந்த மாற்றத்தால் பாதிக்கப்படும் நிறுவனங்கள் சில இடையூறுகளைச் சந்திக்க நேரிடலாம் என்று தனது முன்மொழிவில் குறிப்பிட்டுள்ள உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS), அதேவேளையில் அந்த வேலைவாய்ப்புகள் அமெரிக்கத் தொழிலாளர்களுக்குச் செல்லக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
சில சூழ்நிலைகளில், வெளியேறும் குடியேறிய தொழிலாளர்கள் தங்கள் ஸ்பான்சர் அவர்களுக்காக விண்ணப்பித்தால், மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது என்றும் அது மேலும் தெரிவித்தது.
2017-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள 60 நாள் அவகாசக் காலமானது, வெளிநாட்டு ஊழியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் முன், அமெரிக்காவில் வேறொரு வேலையைத் தேடிக்கொள்ளவோ அல்லது தங்கள் விவகாரங்களைச் சரிசெய்துகொள்ளவோ (வீட்டை விற்பது அல்லது குழந்தைகளைப் பள்ளியிலிருந்து மாற்றுவது போன்றவை) வாய்ப்பளிக்கிறது.
1990-இல் அமெரிக்க நாடாளுமன்றத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட H-1B விசாக்கள், இந்தியா மற்றும் சீனாவிலிருந்து திறமையாளர்களை ஈர்க்க விரும்பும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மிகவும் முக்கியமானவை; தகுதியுள்ள அமெரிக்கப் பணியாளர்கள் சில சமயங்களில் கிடைக்காத நிலையில், அந்தப் பணிகளை நிரப்ப இவை உதவுகின்றன.
இந்த மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டால், E-1 சர்வதேச வர்த்தக விசா வைத்திருப்பவர்கள்; E-2 வணிக வாகன சாரதி விசா வைத்திருப்பவர்கள்; சர்வதேச நிறுவனங்களில் பணிபுரியும் நிர்வாகிகள் அல்லது மேலாளர்களுக்கான L-1 குறுகிய காலப் பணி விசா; அறிவியல், விளையாட்டு அல்லது கலைத் துறைகளில் திறன் கொண்டவர்களுக்கான O-1 விசா; மற்றும் TN தொழில்முறைப் பணியாளர்கள் ஆகியோருக்கும் இது பொருந்தும்.
இது சிங்கப்பூர் மற்றும் சிலியைச் சேர்ந்த H-1B1 திறன்மிக்க பணியாளர் விசா வைத்திருப்பவர்கள் மற்றும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த E-3 சிறப்புப் பணி விசா வைத்திருப்பவர்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும்.






















