72 வயதில் 20 வயது யுவதியை மணந்த கால்பந்து ஜாம்பவான்
மலேசியாவின் முன்னாள் உதைபந்தாட்ட நட்சத்திர வீரரான 72 வயதுடைய டத்தோ அப்தா அலிப், 20 வயதுடைய யுவதியை கடந்த ஓகஸ்ட் 27ஆம் திகதி திருமணம் செய்துகொண்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
திருமணம் இரு குடும்பத்தினரின் முழுமையான சம்மதம் மற்றும் ஆசீர்வாதத்துடன் நடைபெற்றதாக, முன்னாள் தேசிய அணி வீரரும் பயிற்றுவிப்பாளருமான அவரது சகோதரர் டத்தோ யூனுஸ் அலிப் தெரிவித்துள்ளார்.
வைரலாகும் புகைப்படங்கள்
திருமணத்திற்குப் பின்னர் தம்பதியினர் மகிழ்ச்சியாக இல்லற வாழ்க்கையை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்தா அலிப் தனது இளம் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியதைத் தொடர்ந்து, இந்தத் திருமணம் மலேசிய உதைபந்தாட்ட இரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
1970களின் பிற்பகுதியிலும் 1980களின் முற்பகுதியிலும் மலேசிய உதைபந்தாட்டத்தின் பொற்காலத்தில் முக்கிய வீரராகத் திகழ்ந்த அப்தா அலிப், 1980 மாஸ்கோ ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் தென் கொரியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய வரலாற்று வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.
எனினும், ஆப்கானிஸ்தான் மீதான சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து மலேசியா ஒலிம்பிக் போட்டிகளைப் புறக்கணித்ததால், அந்தப் போட்டியில் அவரால் பங்கேற்க முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





















