• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஸ்பெயினில் ஏற்பட்ட 4.8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் - அலறியடித்தபடி தெருக்களில் தஞ்சமடைந்த பொதுமக்கள்

இலங்கை

தெற்கு ஸ்பெயினில் ஏற்பட்ட 4.8 ரிச்டர் அளவிலான பூமியதிர்ச்சியினால் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதுடன், குறைந்தது மூன்று பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஸ்பெயினின் தேசிய புவியியல் நிறுவனத்தின் தகவலின்படி, வரலாற்றுச் சிறப்புமிக்க கிரனாடா நகரத்திற்குத் தெற்கே சுமார் 10 கிலோமீற்றர் தொலைவில் உள்ள 'அல்ஹெண்டின்' நகருக்குஅருகில் செவ்வாய்க்கிழமை காலை அந்நாட்டு நேரப்படி 10:37 மணியளவில் இந்த பூமியதிர்ச்சி மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பூமியதிர்ச்சியைத் தொடர்ந்து வீடுகள் பலமாக அதிர்ந்ததால், பூமியதிர்ச்சி பின்னதிர்வுகளுக்கு அஞ்சி பொதுமக்கள் அலறியடித்தபடி தெருக்களில் தஞ்சமடைந்தனர். கட்டிடங்களின் இடிபாடுகள் மற்றும் கற்கள் விழுந்ததில் பல வாகனங்கள் சேதமடைந்தன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் அருங்காட்சியகங்கள், நிர்வாகக் கட்டிடங்கள் மற்றும் விளையாட்டு மையங்கள் மூடப்பட்டன தெரிவிக்கப்படுகிறது.

யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னமும், ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் மத்தியகால இஸ்லாமியக் கட்டிடக்கலையின் உலகப் புகழ்பெற்ற சின்னமான அல்ஹம்ப்ரா அரண்மனை பூமியதிர்ச்சியைத் தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காகக் கிரனாடாவின் மெட்ரோ புகையிரத சேவைகளின் வேகம் மணிக்கு 30 கி.மீ ஆகக் குறைக்கப்பட்டுள்ளதால் புகையிரதங்கள் தாமதமாக இயங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் அப்பகுதியில் தொடர்ச்சியாக லேசான பூமியதிர்ச்சிகள் பதிவாகி வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட இந்த பூமியதிர்ச்சி மிகவும் சக்திவாய்ந்ததாகவும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
 

Leave a Reply