கனடாவில் தவறான தகவல்கள் மற்றும் வெளிநாட்டு தலையீடு குறித்து ஆய்வாளர்கள் எச்சரிக்கை
கனடா
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வீசிய கொடூரமான காட்டுத்தீயின் தாக்கம் தணிந்து, பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி வரும் நிலையில், இந்த நெருக்கடியை சுயநலவாதிகளும் வெளிநாட்டுச் சக்திகளும் தவறாகப் பயன்படுத்துவதாகத் தகவல் தொடர்பு ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலியான வீடியோக்கள் மற்றும் சமூக வலைதள மீம்கள் மூலம் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
இதன் பின்னணியில் நிதி லாபமும் அரசியல் தலையீடும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கல்கரி பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறை இணைப் பேராசிரியர் ஜீன்-கிறிஸ்டோஃப் பூஷெர் இது குறித்துக் கூறுகையில்: காட்டுத்தீ அல்லது நிலநடுக்கம் போன்ற அவசரகாலச் சூழல்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த பல தரப்பினர் முயல்கின்றனர்.
குறிப்பாக, கனடா அரசாங்கத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைக் குலைப்பதற்காக வெளிநாடுகள் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றன.
அரசாங்கம் உக்ரைனுக்கு வழங்கும் நிதி உதவிக்கு பதிலாக உள்நாட்டு காட்டுத்தீயை அணைக்க 'வாட்டர் பாம்பர்' விமானங்களை வாங்கலாம் என பரப்பப்படும் பதிவுகள், ரஷ்யாவின் தூண்டுதலாக இருக்கலாம் என்றும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் தளங்களில் போலித் தகவல்களைப் பரப்பி வருமானம் ஈட்டுவதே பலரது முக்கிய நோக்கமாகும்.
அழிவை வைத்துப் பணம் பண்ணுவதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியான வீடியோக்களை உருவாக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என பிரிட்டிஷ் கொலம்பியாவின் வனத்துறை அமைச்சர் ரவி பார்மர் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலியான வீடியோக்களை நம்ப வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ அரசு அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றுமாறும் மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அறியப்படாத இணையதள கணக்குகள் மற்றும் போலி பதிவுகள் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.





















