கப்பல்களுக்கு வலைப் போட்ட ரஷ்யா - உக்ரைனிய ட்ரோன்களிடம் தப்பிக்க எடுத்த புதிய முயற்சி
உக்ரைனிய ட்ரோன்களிடம் இருந்து தப்பிக்க மேட் மேக்ஸ் திரைப்பட பாணியில் கப்பல்களுக்கு பாதுகாப்பு வளையங்களை ரஷ்யா அமைத்துள்ளது.
உக்ரைனின் ட்ரோன் தாக்குதலில் இருந்து கப்பல்களை பாதுகாப்பதற்காக ரஷ்யா புதிய மற்றும் வித்தியாசமான முறையை கையில் எடுத்துள்ளது.
அந்த வகையில் டிஸ்டோபியன்(அறிவியல் புனைக்கதை) திரைப்பட காட்சிகளை போல, கருங்கடல் மற்றும் அதனை சுற்றிய கடல் பகுதிகளில் பயணிக்க கூடிய கப்பல்களுக்கு ட்ரோன் தடுப்பு வலைகள், இரும்பு கூண்டுகள் மற்றும் தண்ணீர் தொட்டிகள் ஆகியவற்றை ரஷ்யா பொருத்தியுள்ளது.
இதற்கான முக்கிய உதராணமாக, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடைகளின் கீழ் உள்ள 28 ஆண்டுகள் பழமையான கருசோ(Caruzo) என்ற எண்ணெய் கப்பல் இத்தகைய பாதுகாப்போடு வலம் வருகிறது.
உறுதிப்படுத்திய கடல் போக்குவரத்து ஆய்வாளர்
கடல் போக்குவரத்து ஆய்வாளர் Yoruk Isik வெளியிட்ட வீடியோ காட்சிகளை சுட்டிக்காட்டி பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில், கடந்த செவ்வாய்க்கிழமை பொஸ்பரஸ் ஜலசந்தி வழியாக சென்ற Caruzo டேங்கர் கப்பல் தனது பக்கவாட்டில் ட்ரோன் தடுப்பு வலைகளை தொங்கவிட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கப்பலில் பக்கவாட்டில் தண்ணீர் தொட்டிகள் மற்றும் கூண்டு போன்ற அமைப்புகள் பொருத்தப்பட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய படைகள் தங்களது ராணுவ வாகனங்களில் இத்தகைய இரும்பு வலைகள் மற்றும் தடுப்புகளை பயன்படுத்துவது வழக்கமான ஒன்றாக பார்க்கப்பட்டாலும், வணிக கப்பல்களில் இத்தகைய கூண்டு அமைப்புகளை பயன்படுத்து இதுவே முதல் முறையாகும்.
Caruzo போலவே, இஸ்தான்புல்லுக்கு தெற்கே உள்ள மார்மரா கடலில் ரிஸ்வெல்(Rizvel) என்ற பொருளாதார தடைக்கு கீழ் உள்ள மற்றொரு டேங்கர் கப்பலும் இதே போல் வலைகளால் மூடப்பட்டு சென்றதாக Yoruk Isik தெரிவித்துள்ளார்.























