• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தையிட்டி காணி அளவீட்டில் முரண்பாடு

இலங்கை

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களை விகாரை பகுதிக்கு பதிவுகளை மேற்கொண்ட பின்னரே அனுமதிப்போம் என பலாலி பொலிஸார் காணி உரிமையாளார்களுடன் முரண்பட்டமையால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களில் காணி உறுதிகள் வைத்துள்ள 17 பேரின் காணிகளை அளவீடு செய்வதற்காக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை விகாரை அமைந்துள்ள பகுதிக்கு வருமாறு மாவட்ட செயலர் 17 பேருக்கும் மாவட்ட செயலர் கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருந்தார்.

அதன் அடிப்படையில், காணி உரிமையாளர்கள் விகாரை பகுதிக்கு சென்ற வேளை, விகாரைக்கு அருகில் பொலிஸ் வீதி தடையை ஏற்படுத்திய பொலிஸார் , விகாரை பகுதிக்கு செல்வோரின் அடையாள அட்டைகளை பரிசோதித்து , பதிவுகளை மேற்கொண்டதுடன் , காணி உரிமையாளர்களின் பெயர்கள் அடங்கிய ஒரு பட்டியலை கைகளில் வைத்து சோதனையிட்டு , பெயர் பட்டியலில் பெயர் உள்ளவர்களை மாத்திரமே அனுமதிப்போம் என கூறியுள்ளனர்.

அதனால் , எமது காணிகளை அடையாளம் காட்ட வருமாறு , மாவட்ட செயலர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார். அதனால் தான் வந்தோம் , பதிவுகளை மேற்கொண்டு பொலிஸ் கெடுபிடிகளுக்கு முகம் கொடுத்து தான் எமது காணிகளை அடையாளம் கட்ட வேண்டும் என கூறினால் , நாங்கள் திரும்பி வீடு செல்கிறோம் என பொலிஸாருடன் தர்க்கப்பட்டனர். அதனால் அவ்விடத்தில் குழப்பமான நிலைமை ஏற்பட்டது.

அதேவேளை தென்னிலங்கையில் இருந்து சில பிக்குகள் உள்ளிட்ட , தென்னிலங்கை வாசிகள் சிலர் எந்த பதிவுகளும் இல்லாமல் உள்ளே சென்றுள்ளனர் என்றும் , அவர்களுக்கு இருக்கும் உரிமை காணி உரிமையாளர்களான எங்களுக்கு இல்லையா என பொலிசாரிடம் காணி உரிமையாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

தற்போது காணி அளவீட்டு பணிகளுக்காக நிலஅளவை திணைக்கள அதிகாரிகள் , தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், மாவட்ட செயலர் ,உள்ளிட்ட அதிகாரிகள் வருகை தந்துள்ள நிலையில் , நாடாளுமன்ற உறுப்பினர் ச.ஸ்ரீபானந்தராசாவும் வருகை தந்துள்ளார்.

காலை 08 மணிக்கு அளவீட்டு பணிகள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் காலை 10 மணி வரையில் அளவீட்டு பணிகள் எவையும் முன்னெடுக்கப்படாத நிலை காணப்படுகிறது
 

Leave a Reply