தமிழகத்தில் தஞ்சம் அடைந்திருந்த இலங்கையர்கள் சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயற்சி -படகோட்டி உட்பட மேலும் மூவர் கைது
இலங்கை
இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் திகதியிலிருந்து இலங்கை தமிழர்கள் 300-க்கும் மேற்பட்டோர் சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தனுஷ்கோடிக்கு சென்று தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர்.
தமிழகத்திற்கு அகதிகளாக வந்த 300க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்களை மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைத்தனர்.
இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி சீராகி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் மீண்டும் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர்கள் தங்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு பலமுறை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தில் மனு அளித்தனர்.
சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக தமிழகத்திற்குள் நுழைந்ததால் அவர்களை திருப்பி அனுப்ப முடியவில்லை இதனால் பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கியிருந்த பெரும்பாலான இலங்கை தமிழர்கள் மீண்டும் சட்ட விரோதமான முறையில் படகு மூலம் மீண்டும் இலங்கைக்கு திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மண்டபம் சிறுவர் பூங்காவில் உள்ள விநாயகர் கோவிலில் அருகே தெற்கு கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த மூன்று இலங்கை தமிழர்களை கியூ பிரிவு பொலிஸார் நேற்று மாலை(27) பிடித்து விசாரணை நடத்தினர்.
இதன்போது அவர்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்து மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியிருந்த இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் குருநகர் பகுதியைச் சேர்ந்த ஜிம்ஸ்ரிவ் (48)இ அவரது மனைவி ராஜினி (47) இவர்களது மகள் திபேந்தினி (20) என்பது தெரியவந்தது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் சட்டவிரோதமாக படகில் இலங்கைக்கு தப்பி செல்ல காத்திருந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து இலங்கை தமிழர்களை படகில் இலங்கை அனுப்புவதற்கு உதவியாக டீசல் மற்றும் பேக்குடன் நின்று கொண்டிருந்த மண்டபம் எருமை தரவை பகுதியை சேர்ந்த இலங்கையர்கள் மூவர் என மொத்தம் ஆறு பேரையும் கைது செய்து மண்டபம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ஒப்படைக்கப்பட்ட ஆறு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த மண்டபம் காவல்துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.






















