பல்கலைக்கழக அனுமதி வழிகாட்டி கைநூல் இன்று நள்ளிரவு வெளியீடு
இலங்கை
அரசு பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பது தொடர்பான வழிகாட்டி கைநூல் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
2025-ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாணவர்கள் பாடநெறிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்த விரிவான அறிவுறுத்தல்கள் இக்கைநூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய 2 இலட்சத்து 81 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களில், ஒரு இலட்சத்து 76 ஆயிரத்து 527 மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவிற்காகத் தகுதி பெற்றுள்ளனர்.
தகுதியுள்ள மாணவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக இன்று நள்ளிரவு முதல் இந்த வழிகாட்டி கைநூலைப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.






















