உக்ரைன் - ரஷியா மோதல் -டிரோன், ஏவுகணை தாக்குதல்களில் 18 பேர் பலி
5 ஆண்டிகளாக நீடித்து வரும் உக்ரைன் - ரஷியா போர் தீர்வின்றி நீடித்து வருகிறது.
இந்நிலையில் 659 டிரோன்கள் மற்றும் 44 ஏவுகணைகளைக் கொண்டு உக்ரைனின் 20-க்கும் மேற்பட்ட இலக்குகளை ரஷியா நேற்று தாக்கியுள்ளது. இதில் 18 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
குறிப்பாக இந்த தாக்குதலில் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் குடியிருப்பு மற்றும் பொதுக் கட்டிடங்கள் கடுமையாகச் சேதமடைந்தன.
இதில் ஒரு 12 வயது சிறுவன் உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர், 48 பேர் காயமடைந்தனர். மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவக் குழுவினர் மீதும் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது.
அதேபோல் துறைமுக நகரமான ஒடெசாவில் அடுக்குமாடி குடியிருப்புகள் தாக்கப்பட்டதில் 9 பேர் கொல்லப்பட்டனர், 23 பேர் காயமடைந்தனர். பல வீடுகள் தீக்கிரையாகின.
அதிபர் ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரான டினிப்ரோ வில் நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று பெண்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 27 பேர் காயமடைந்தனர்.
பதிலடியாக உக்ரைனும் ரஷியாவை நோக்கி 200-க்கும் மேற்பட்ட டிரோன்களை ஏவியது.
ரஷியாவின் கிராஸ்னோடர் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும் பெல்கொரோட், ஸ்மோலென்ஸ்க், குர்ஸ்க் போன்ற எல்லைப் பகுதிகளிலும் உக்ரைன் டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷியா தெரிவித்துள்ளது.






















