எப்ஸ்டீனுடன் தொடர்பு பேணிய நோர்வே ராஜதந்திரி பதவி விலகல்
அமெரிக்க குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பு வைத்திருந்ததாக விமர்சனத்திற்கு உள்ளான நோர்வே தூதுவர் மோனா ஜூல் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
நோர்வே வெளிநாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோர்டானில் நோர்வே தூதுவராக பணியாற்றி வந்த மோனா ஜூல் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது ராஜினாமாவை சமர்ப்பித்ததாக தெரிவித்துள்ளது.
அவர் சில நாட்களுக்கு முன்பு இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். 2019ஆம் ஆண்டு நியூயோர்க் சிறையில் தற்கொலை செய்துகொண்ட எப்ஸ்டீன், தனது இறப்புக்கு முன்னர் தயாரித்த உயிலில், ஜூல் மற்றும் அவரது கணவர் டெர்ஜே ரோட்-லார்சன் ஆகியோரின் குழந்தைகளுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர் விட்டுச் சென்றதாக வெளியான தகவல்களின் பின்னணியில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
நோர்வே வெளியுறவு அமைச்சர் எஸ்பென் பார்த் ஐடே, ஜூலின் ராஜினாமா “சரியானதும் அவசியமானதும்” எனக் குறிப்பிட்டார்.
தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளியுடன் தொடர்பு வைத்திருந்தது “தீர்மானத்தில் கடுமையான தவறு” எனவும், “அந்தப் பதவிக்கு தேவையான நம்பிக்கையை மீண்டும் நிலைநிறுத்துவது கடினம்” எனவும் தெரிவித்தார்.
ஜூலுக்கு எப்ஸ்டீனுடன் இருந்த தொடர்புகள் குறித்து அமைச்சகத்தின் உள்நிலை விசாரணை தொடர்ந்து நடைபெறும் எனவும், இந்த விவகாரம் தெளிவுபடுத்தப்படும்வரை அவர் அமைச்சகத்துடன் ஒத்துழைப்பார் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
எப்ஸ்டீன் தொடர்பான புதிய ஆவணங்கள் வெளிவந்ததையடுத்து, நோர்வேயின் பல முக்கிய பிரபலங்களின் பெயர்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.






















