• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மதுக்குரல் மன்னன் கே. எஸ். ராஜா

சினிமா

கனகரத்தினம் சிறிஸ்கந்தராஜா அல்லது கே.எஸ்.ராஜா (8 பெப்ரவரி 1942 - 3 செப்டம்பர் 1994 முன்னர் இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் பிரபலமாக இருந்த வானொலி அறிவிப்பாளர் ஆவார்.இவர் பொதுவாக மின்னல் வேக அறிவிப்பாளர் எனவும் அழைக்கபட்டிருந்தார். வானொலி அறிவிப்பில் முதலில் வேகத்தை கொண்டு வந்தவர் இவரே ஆகும்.ராஜாவின் இயற்பெயர் ஸ்ரீஸ்கந்தராஜா. இவர் இலங்கையின் யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த நடுத்தர வகுப்புக் குடும்பத்தில் இலங்கையின் மலையகத்தில் பதுளையில் பிறந்தார். யாழ்ப்பாணம் கொட்டடியில் வளர்ந்தார். தந்தை ஒரு மருத்துவர். தாயார் ஆசிரியை. தமக்கைமார் நால்வரும் மருத்துவர்கள். 1966 இல் கொழும்பு ரோயல் கல்லூரியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். அங்கு அவர் மாணவர் பேரவைத் தலைவராக இருந்து செயற்பட்டார். பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு இலங்கைப் பல்கலைக்கழகத்திலும், பின்னர் இலண்டன் பல்கலைக்கழகத்திலும். கணிதம் மற்றும் வேதியியலில் பட்டம் பெற்றார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் விரிவுரையாளராகப் பணியாற்றிய பின்னர், வானொலி ஆர்வத்தின் காரணமாக இலங்கை வானொலியில் பணியில் சேர்ந்தார். இவர் இலங்கை வானொலியில் முன்னணி அறிவிப்பாளராக இருந்தபோது பல வானொலி நிகழ்ச்சிகளை ஆரம்பித்து நடத்தி வந்தார். இவரின் நிகழ்ச்சிகளுக்கு கடல் கடந்து தென்னிந்தியாவிலும் ரசிகர்கள் இருந்தனர். வீட்டுக்கு வீடு
வானொலிப் பெட்டிக்கருகே
ஆவலுடன் குழுமியிருக்கும் பெருமக்கள் அனைவருக்கும் உங்கள் அறிவிப்பாளன் K.S.ராஜாவின் அன்பு வணக்கம்!”
1970, 80களில் காற்றின் அலைகளில் தவழ்ந்து வந்த இலங்கை வானொலி வர்த்தக சேவைகளில் இந்த வாசகத்திற்கு இருந்த மதிப்பே தனி!
இவர் பேசுவதில் சொக்கிப்போன ரசிகர்கள், இவரின் குரலுக்காகவும் சொல்லுக்காகவும் ரேடியோவுக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்திருப்பார்கள்.
இலங்கை வானொலியின் கூட்டு ஸ்தாபனம் என்கிற அறிவிப்பே அத்தனை அழகு.அன்றைக்கு மக்களின் மனம் கவர்ந்த பாடல்களைக் கேட்க பேருதவி செய்தது, இலங்கை வானொலி நிலையம்தான்.
‘உங்கள் நண்பன் கே.எஸ்.ராஜா’ என்று அவர் அறிவிப்பதற்கு ரேடியோ பக்கத்திலிருந்து கைத்தட்டுவார்கள் ரசிகர்கள். ‘நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்’ என்கிற சிவாஜி நடித்த ‘ராஜா’ படத்தில் இருந்து பாடல் ஒலிபரப்பாகும். அந்தப் பாட்டில் ‘ராஜா’ என்று பெண் குரல் ஒலிக்கும். ‘ஆம்… உங்கள் நண்பன் கே.எஸ்.ராஜா’ என்று அறிவிப்பு வர, பித்துப்பிடித்துப் போனார்கள் வானொலி ரசிகர்கள். நான் ஏன் பிறந்தேன்' படத்தில்
கே.ஆர்.விஜயாவிடம் எம்.ஜி.ஆர் பேசுவதாக வரும்....,
"அழறவங்களை சிரிக்க வைக்கிறதும், சிரிக்கிறவங்களை சிந்திக்க வைக்கறதும் தான் என்னோட லட்சியம்!"
என்ற வசனத்தை மட்டும் தனியே பிரித்தெடுத்து........

"மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களே! உங்கள் இலட்சியம் என்ன?" என்று நீங்கள் பேசிவிட்டு, அந்த இடத்தில் கொண்டு வந்து லிங்க் கொடுப்பீர்களே...... அடடா! ராஜா குறிப்பிட்ட நிகழ்ச்சியில் ஒரே உணர்வுள்ள பாடல்களைத் தெரிவுசெய்து ஒலிபரப்புவார். பாடலைப் பற்றி ஒன்றோ, இரண்டோ வரிகள் சொல்வார். இடையில் அவரது குறும்புத்தனமும் இருக்கும். ‘குடியிருந்த கோயில்’ (1968) படத்தில் இடம் பெறும் பாடல் ‘என்னைத் தெரியுமா?’ பாடலின் அடுத்த வரி வருவதற்குள் ராஜா நுழைந்துவிடுவார். ‘தெரியுமே… டி,எம்.சௌந்தரராஆஆஜன்’. அவரது உற்சாகம் ரசிகனையும் தொற்றிக்கொள்ளும்.
ராஜாவின் நிகழ்ச்சிகளில் குறிப்பிடத்தக்கவை திரை விருந்தும் உமாவின் விநோத வேளையும். திரை விருந்து திரைப்பட விளம்பர நிகழ்ச்சி. இதில் ஒலிபரப்பான படங்கள் திரையிடப்பட்ட மகாத்மா - நெல்லியடி, செல்லமகால் - கொட்டாஞ்சேனை, சாந்தி - யாழ்ப்பாணம் முதலான திரையரங்குகள் தமிழ்நாட்டு நேயர்களுக்கும் பரிச்சியமானவையாக இருந்தன. உமாவின் விநோத வேளை ஒரு போட்டி நிகழ்ச்சி. இதன் விதிமுறைகள் எனக்குத் தலைகீழ்ப் பாடம். ராஜா விதிகளை அதிவிரைவாகவும் ஏற்ற இறக்கங்களோடும் சொல்லுவார். ‘என்னுடன் தொடர்ச்சியாக இரண்டு நிமிடங்கள் உரையாட வேண்டும். உரையாடும்போது ஆம், இல்லை, முடியாது போன்ற சொற்களையோ அதற்குச் சமமான சொற்களையோ உபயோகிக்கக் கூடாது. தலையசைத்துப் பதிலளிக்கக் கூடாது. தொடர்ச்சியாக ஐந்து விநாடிகள் மௌனம் சாதிக்கக் கூடாது. ஒரு சொல்லை இரண்டு தடவைக்கு மேல் உபயோகிக்கக் கூடாது. ஒரே சொல்லில் பதிலளிக்கக் கூடாது.’நீயா’ (1979) படத்துக்கு ராஜா வழங்கிய திரை விருந்தை மறக்க முடியாது. படத்தில் தனது காதலனின் உயிர் பிரியும்போது ‘ராஜா, என்னை விட்டுட்டு போயிட்டீங்களே’ என்று ஸ்ரீப்ரியா அழுவதாக ஒரு வசனம் வரும். நிகழ்ச்சியின் முடிவில் ராஜா அந்த வசனத்தை வைப்பார். தொடர்ந்து அவரே ‘இல்லை ஸ்ரீப்ரியா, இன்று உங்கள் ராஜா விடைபெறும் நேரம் வந்துவிட்டது. மீண்டும் அடுத்த வாரம் இதே வேளையில் உங்கள் அனைவரையும் சந்திப்பேன்’ என்று சொல்லி முடிப்பார். இந்தியாவில் ஓடாத படங்கள் இலங்கையில்
உங்கள் மந்திர உச்சாடனம் கேட்டதால்
100 நாள்.. வெள்ளி விழா... என வெற்றி நடை போட்டனவே...
அதைத் தான் சொல்கிறேன்...
இந்தியாவிலும் கூட பின்னணியில் இருந்த பல படங்கள்...
திரை விருந்து நிகழ்ச்சிகளில்
உங்கள் 'தங்கக் குரல் 'கட்டி விட்ட 'தாயத்து' மகிமையால்
சிங்க நடை போட்டு
விநியோகஸ்தர்களை வசூல் மழையில் நனைத்ததைப் பற்றிய
வியப்புச் செய்திகளையும்
பத்திரிகைச் செய்திகளில் படித்திருக்கிறேன்.
உங்கள் உற்சாக குரலுக்காக மட்டுமன்றி அந்த வார நிகழ்ச்சியில்
புதிதாக நீங்கள் செய்யப்போகும் ஒட்டு வேலைகளையும்,
விளம்பர சாதுர்யங்களையும் தவறாது ரசிப்பதற்காக
சலிக்காத ரசிக வேட்கையுடன்
வானொலிப் பெட்டிக்கு அருகில் காத்துக் கிடந்தேன் என்பதை
அறிவீர்களா ராஜா ?
நடிகர் திலகத்தின் 'எங்கள தங்க ராஜா' படத்துக்கு
நீங்கள் விளம்பரம் வாசித்தபோது
எங்கள் என்று குதூகலமாக ஆரம்பித்து...
தங்க என்ற இடத்துக்கு வரும்போது
குரலில் குழைவு கூட்டி அவசரமாக நெகிழ்ந்து..
ராஜா என்று கம்பீரமாக முடிப்பீர்களே...நீயா, குரு, நிறம் மாறாத பூக்கள். பட்டாக்கத்தி பைரவன், மீனவநண்பன், என்று பல படங்களுக்கு... நீங்கள் செய்து காட்டிய
இது போன்ற ரேடியோ கிராபிக்ஸை எல்லாம்
இன்றும் கூட என் செவிகள் அசை மீட்டு ரசிப்பதுண்டு. கவியரசர் கண்ணதாசன் காலமானார் என்ற சேதி அறிந்தவுடன்
மூச்சிரைக்க ஓடி வந்து...
இலங்கை வானொலி இசைத்தட்டுக் களஞ்சியத்துக்குள் பார்வை பதித்து...
உங்களுக்கே இயல்பான தேர்ந்த அவசரத்துடன்
கண்ணதாசன் எழுதிய முதல் இசைத் தட்டைத் தேடிப்பிடித்து...
இன்னும்... இன்னும்... அவர் கவிப்புலமைக்கு
மகுடம் சூட்டிய இசைத் தட்டுக்களை எல்லாம் அள்ளிக்கொண்டு
அவசர அவசரமாக அன்றைய திரை விருந்து நிகழ்ச்சியை
அரசவைக் கவிஞருக்கு கண்ணீர் அஞ்சலியாக்கி...
அயல்நாட்டு வானொலிகளையும் முந்தி நின்றீர்களே...
இது போன்ற ரேடியோ கிராபிக்ஸை எல்லாம்
இன்றும் கூட என் செவிகள் அசை மீட்டு ரசிப்பதுண்டு. மதுரக்குரல் மன்னன் என்று அழைத்தார்கள் இவரை. அறிவிப்பாளர்களின் அரசன் என்று புகழ்ந்தார்கள். அறிவிப்பு ஒருபக்கம் அள்ளும். அத்துடன் மக்களின் மனசுக்கு நெருக்கமான பாடல்களை ஒலிபரப்பப்படும். அந்தப் பாடல்களை ஒலிக்கும் நேரம்தான், மக்களின் மிகப்பெரிய ரிலாக்ஸ் நேரம்.1987 ஆம் ஆண்டில் ‘இலங்கை – இந்திய ஒப்பந்த’த்தைத் தொடர்ந்து இலங்கை திரும்பிய இவர் இலங்கை வானொலியில் தமது வழக்கமான பணிகளுக்கு திரும்பினார்!
இந்நிலையில், 1989ஆம் ஆண்டு கொழும்பில் இவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவரது உடல் கொழும்பு கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டது. இவரது ‘நினைவு சமாதி’ கொழும்பு பொரல்லை மயானத்தில் உள்ளது. வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கு அருகில்
ஆவலுடன் கூடியிருக்கும் எங்கள்
வானுயர்ந்த ரசனைகள் வற்றாத வரை...
உங்களை
மறக்க முடியுமா ராஜா ?
Sukumar Shan

 

Leave a Reply