பலசரக்குக் கடையை உடைத்து காட்டு யானை தாக்குதல்
இலங்கை
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நீணாக்கேணி கிராமத்திற்குள் இன்று அதிகாலை காட்டு யானையொன்று உட்புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிராமத்திலுள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்டு வந்த பலசரக்குக் கடையை காட்டு யானை உடைத்து சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் போது கடையின் கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், கடையில் இருந்த உபகரணங்கள் மற்றும் பொருட்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், குறித்த வீட்டைச் சூழவுள்ள பாதுகாப்பு வேலியும் காட்டு யானையால் சேதமாக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக மாலை நேரங்களில் தமது கிராமப்பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதால், உயிர் மற்றும் சொத்துப் பாதுகாப்பு தொடர்பில் கடும் அச்சுறுத்தல் நிலவி வருவதாக கிராம மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதனால் இரவு நேரங்களில் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், காட்டு யானை தாக்குதலால் ஏற்பட்ட சொத்து இழப்புகளுக்கு அரசாங்கம் உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் தடுக்கும் வகையில் யானை பாதுகாப்பு வேலி (அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மூதூர் நீணாக்கேணி கிராம மக்கள் அதிகாரிகளிடம் வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்.





















