கலைவாணர் அவருடைய கடைசி காலகட்டத்தில் சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் இருந்தாரே, அப்போது ஒரு நிகழ்ச்சி
சினிமா
கலைவாணர் அவருடைய கடைசி காலகட்டத்தில் சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் இருந்தாரே, அப்போது ஒரு நிகழ்ச்சி.
அவரைக் காண அங்கு சென்றவர்களில் குறிப்பிட்ட பலரிடமும் ''ராமச்சந்திரனைப் பார்க்கணும்; அவனை வரச் சொல்லுங்கள்'' என்றாராம். மதுரம் அம்மையார் அவர்களும் போன் வழியாக எனக்குத் தகவல் கொடுத்தார். ''யாரும் அவரைப் பார்த்துத் தொந்தரவு செய்யக் கூடாது'' என்று டாக்டர் அட்வைஸ் செய்திருப்பதாக அறிந்ததால், நான் நேரில் போய்ச் சந்திக்கத் தாமதித்தேன்.
ஆனால், உடனடியாக நேரில் போய்க் கலைவாணரைப் பார்க்கவில்லையே தவிர, அவருடைய நலத்துக்கான ஆர்வமும் எல்லாவிதத் தொடர்பும் கொண்டிருந்தேன்.
பிறகு இரண்டொரு நாட்களிலேயே நேரில் பார்க்கச் சென்றேன். அவர் என்னைப் பார்த்ததும், ''ராமச்சந்திரா, நான் எதுக்காகக் கூப்பிட்டனுப்பினேன் தெரியுமா? பல பேர் வர்றாங்க. வந்து, பார்த்துட்டுப் போறாங்க. பத்திரிகைக்காரங்க, 'அவர் வந்து பார்த்தார். இவர் போய்ப் பார்த்தார்’ என்று செய்தி வெளியிடுறாங்க. நீ மட்டும் வந்து பார்த்ததாகச் செய்தி வர்றதில்லை. அதனால் நீ வந்து பார்க்கலைங்கிற செய்திதான் வெளியே தெரியும். எனக்காக நீ செய்துவருகிற காரியங்கள் எல்லாம் யாருக்கும் தெரியாது. நீ வரலைன்னு மக்கள் தவறா நினைப்பாங்க. அந்தக் கெட்ட பேர் உனக்கு வேண்டாம்னுதான் உன்னை வரச் சொன்னேன்'' என்றார்.
என்னை வற்புறுத்தி அழைத்ததன் காரணம் இதுதான் என்பது எனக்கு மட்டுமல்ல; யாருக்குத்தான் இந்த வகையில் புரிந்திருக்க முடியும்? அவர் தனக்காகவா என்னை அழைத்தார்? எனக்காக அல்லவா என்னை அழைத்திருக்கிறார்!
அந்தப் புரியாத புதிரைப் பற்றி என்ன சொல்வது? எப்பேர்ப்பட்ட ஒரு மாபெரும் பண்பு அவரது அந்த அழைப்பில் வெளிப்பட்டது!
அப்படிப் புரியாத புதிராக இருந்த காரணத்தால்தான் என்றென்றும், வரலாறு உள்ள வரைக்கும் நிலைத்து விளங்கும் தகுதி அவரிடம் நிறைந்திருக்க முடிந்தது.
இந்த நாட்டில் எத்தனை எத்தனையோ உள்ளங்களில் அவர் நினைவு குடி கொண்டிருப்பதற்குக் காரணம் அந்தப் பண்புமிக்க செயல்கள்தாம்.
கலைவாணரின் மறைவின்போது துக்கம் தெரிவித்தவர்களில் கட்சி பேதம், மொழி பேதம், இன பேதம் இருக்கவில்லையே! எல்லோரும் தங்களைச் சேர்ந்த ஒரு நல்லவர், உத்தமர், கலைச்செல்வர், அறிவாளி மறைந்துவிட்டதாக அல்லவா துயரம் தெரிவித்தார்கள்!
அவர் மறைந்தாலும், அவர் நினைவு மறையாததற்குக் காரணம், அவர் தமக்கென்று அமைத்துக்கொண்ட வாழ்க்கைப் பண்பு அல்லவா? அந்தப் பண்பின் செயல்களை, உள்ளபடி இன்னும் புரிந்துகொண்டவர்கள் யாரும் இல்லை என்று சொல்வதுதான் பொருத்தமாகும்.
- 1966 , விகடன் தீபாவளி மலரில் மக்கள் திலகம் .
( படம் : பெரியவர் எம்.ஜி.சக்ரபாணி இல்ல மணவிழாவில் , அண்ணா , கலைவாணர் , பேராசிரியர், வரவேற்றுப் பேசும் எம்ஜியார் )






















