கரைவலை மீனவர்களின் சத்யாகிரகப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது
இலங்கை
உழவு இயந்திரங்களுடன் பொருத்தப்பட்ட வின்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கரைவலை மீன்பிடி நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி மீனவர்கள் ஆரம்பித்த சத்யாக்கிரகப் போராட்டம் இன்று (07) மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.
முல்லைத்தீவு மற்றும் கொக்கிளாய் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த கரைவலை மீனவர்கள் கடந்த 5ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
தமது பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியின் பணிப்பாளர் நாயகம் டி. கமகேவுடன் அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, நேற்று கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையைச் சந்தித்துத் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அத்துடன், கடற்றொழில் அமைச்சின் செயலாளர் மற்றும் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் நேற்று மாலை மீனவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.
இவ்விடயம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சு, கரைவலை மீன்பிடி ஒழுங்குவிதிகளுக்குப் புறம்பாகச் செயற்படுவதால் சுற்றாடலுக்குக் கடும் பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளது.






















