சம்பள உயர்வு புரிந்துண உடன்படிக்கை வர்த்தமானியில் வெளியிட கணபதி கனகராஜ் வேண்டுகோள்
இலங்கை
தோட்டத் தொழிலாளர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பள அதிகாரிப்புக்கு அரசாங்கமும் பெருந்தோட்டக் கம்பனிகளும் செய்து கொண்ட புரிந்துனர்வு உடன்படிக்கையை வர்த்தமானியில் வெளியிடப்பட்டு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் .
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர் , பெருந்தோட்ட நிறுவனங்கள் தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாக கூறிக்கொண்டு கொள்ளை லாபம் ஈட்டும் நிறுவனங்களாக காணப்படுகின்றன.
சம்பள அதிகரிப்பு கோரிக்கை எழும் போதெல்லாம் அதற்கு பாதகமான பதிலையே தெரிவித்து வந்திருக்கின்றன.
இந்த நிலையில் தற்போது அரசாங்கம் கடுமையான நிற்பந்தத்தை கொடுத்து அடிப்படை சம்பளத்தில் 200 ரூபாய் அதிகரிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் அதற்கு பதிலாக 2042 இலிருந்து மேலும் 50 வருடங்களுக்கு பெருந்தோட்டங்களை அதே கம்பனிகளுக்கு குத்தகை நீடிப்பு வழங்குவதற்கு இரகசிய உடன்பாடு ஏற்பட்டி ருப்பதாகவும் தகவல்கள் கசிந்திருக்கின்றன.
இதன் உண்மைத்தன்மை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.
மேலும் 50 ஆண்டுகளுக்கு பெருந்தோட்ட சமூகம் பெருந்தோட்ட கம்பனிகளின் கொத்தடிமைகளாக இருக்க முடியாது. இதற்கு அரசாங்கத்தின் பொறுப்பான பதிலை எதிர்பார்க்கிறோம்.
தற்போது தோட்டங்களில் வேலை செய்பவர்களில் இருபத்தைந்து வீதத்துக்கும் குறைவானவர்களே நிரந்தர தொழிலாளர்களாக தொழில் புரிகின்றனர்.
மீதமுள்ள 75 வீதமானவர்கள் தற்காலிக தொழிலாளர்களாகவும், பறிக்கப்படும் கொழுந்திற்க்கு மட்டும் ஊதியம் பெறுபவர்களாகவும், ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்பவர்களாகவும், ஓய்வு பெற்ற வயது முதிர்ந்த துண்டு கூலி அடிப்படையிலான தொழிலாளர்களாகவும் தோட்டங்களில் வேலை செய்கின்றனர்.
இதனால் உயர்த்தப்பட்ட சம்பளம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் இருக்கின்றன.
அதிகரிக்கப்பட்ட அரசாங்கத்தால் வழங்கப்படவிருக்கின்ற 200 ரூபாய் தோட்டத்தில் வேலைக்கு செல்கின்ற சகல தொழிலாளர்களுக்கும் கிடைக்குமா?
சம்பளம் அதிகரிப்பின் அனுகூலங்களை தற்காலிகமாக , பறிக்கப்படும் கொழுந்தின் அளவிற்கு மட்டும் ஊதியம் பெறுகின்ற, மற்றும் ஒப்பந்த அடிப்படையில் தொழில் செய்கின்ற தொழிலாளர்களுக்கும் கிடைக்கும் வகையில் ஏதாவது பொறிமுறை இருக்கிறதா?
பெருந்தோட்ட கம்பனிகளால் நிர்வகிக்கப்படுகின்ற தோட்டங்களை தவிர்ந்த தனியாருக்கு சொந்தமான தோட்டங்களில் வேலை செய்கின்ற தோட்டத் தொழிலாளர்கள் நிலைமை என்ன?
அல்லது தற்போது நிரந்தர தொழிலாளர்களாக இருக்கின்ற சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு மட்டும் இது வழங்கப்படுவதாக இருந்தால் சம்பளம் அதிகரிப்பு 75% தோட்டத் தொழிலாளர்களை புறக்கணிப்பதாக அமையும்.
அரசாங்கம் பெருந்தோட்ட கம்பெனிகளும் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என தெரிவிக்கப்படுகிறது.
அவ்வாறாயின் இந்த சம்பள அதிகரிப்பின் மூலம் ஏதாவது ஒரு தரப்பு பாதிக்கப்பட்டி ருந்தால் அவர்கள் தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தி நியாயம் கோருவதற்கு எவ்வித வழிமுறைகள் இல்லாமல் ஆக்கப்பட்டு இருக்கிறது.
இங்கு தொழில் சட்டமும், சம்பள நிர்ணய சபையும் மௌனிக்கப்பட்டிருக்கின்றன. இது தொழிலாளர் சமூகத்துக்கு சாதகமான ஒரு நிலை அல்ல. எனினும் தற்போதைய அரசாங்கம் வரலாற்றில் எந்த ஒரு அரசாங்கமும் செய்யாத அளவுக்கு தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு விடயத்தில் இதய சுத்தியேடு செயல்பட்டி ருக்கிறது.
செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர் உடன்படிக்கையில் நாம் சுட்டிக் காட்டி இருக்கின்ற குறைபாடுகளையும் நிவர்த்தி செய்து தோட்டத் தொழிலாளர்களுக்கு சாதகமான ஒரு நிலையை ஏற்படுத்த வேண்டும் என அரசாங்கத்தை வேண்டுகிறோம். என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.






















