• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கை மீனவர்கள் மீதான தாக்குதல் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு

இலங்கை

ஜனவரி 29 அன்று இந்திய கடலோர காவல்படையினரால் இலங்கை மீனவர்கள் குழு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மறுத்துள்ளது.

2026 ஜனவரி 29, அன்று கடலில் இலங்கை மீனவர்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் தொடர்பான ஊடக அறிக்கைகளை கவனித்ததாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

தகவல்களைச் சேகரித்த பின்னர், இந்திய கடற்படை அல்லது இந்திய கடலோர காவல்படை வீரர்களால் அத்தகைய தாக்குதல் நடத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று உயர் ஸ்தானிகராலயம் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியது.

அத்துடன், மீனவர்களின் வாழ்வாதாரக் கவலைகளுக்கு மனிதாபிமான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், எந்த சூழ்நிலையிலும் பலத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றும் இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது என்று இந்திய உயர் ஸ்தானிகராலயம் மேலும் கூறியது.

இந்த விடயங்கள் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் உயர் ஸ்தானிகராலயம் தொடர்பில் உள்ளது என்றும் அது குறிப்பிட்டது.

ஜனவரி 29 ஆம் திகதி, வென்னப்புவ மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட இரண்டு மீன்பிடி படகுகளில் இருந்த 12 இலங்கையர்கள், இலங்கையின் கடல் எல்லைக்குள் இருந்தபோது இந்திய கடலோர காவல்படை வீரர்களால் தாக்கப்பட்டதாக மீனவர்கள் குழு ஒன்று குற்றம் சாட்டியது.

சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவிட்டு இலங்கைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து அரசாங்கம் வெளிப்படையான விசாரணையை நடத்த வேண்டும் என்று மீனவர் சங்கத்தினர் கோரியிருந்தனர்.

மூன்று மீன்பிடி படகுகள் தாக்கப்பட்டதாகவும், அவற்றில் இரண்டு இலங்கையின் கடல் எல்லைக்குள் இருந்ததாகவும், இந்திய கடலோர காவல்படை வீரர்கள் தாக்குதலை நடத்த இலங்கையின் கடல் எல்லையைத் தாண்டியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
 

Leave a Reply