இலங்கையின் சுதந்திர தினத்துக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து
இலங்கை
இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு இன்று (04) வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
சீனாவும் இலங்கையும் வளர்ச்சி மற்றும் மறுமலர்ச்சிப் பாதையில் சக பயணிகள் என்றும், பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பைப் பின்பற்றும் நல்ல பங்காளிகள் என்றும் சீன ஜனாதிபதி அந்த செய்தியில் குறிப்பிட்டார்.
சீன – இலங்கை உறவுகளின் வளர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகக் குறிப்பிட்ட ஜி ஜின்பிங், சீன-இலங்கை மூலோபாய கூட்டுறவு கூட்டாண்மையை ஆழப்படுத்தவும், இரு மக்களுக்கும் சிறந்த பயனளிக்கும் வகையில், பகிரப்பட்ட எதிர்காலத்துடன் கூடிய சீன-இலங்கை சமூகத்தை உருவாக்கவும் அநுரகுமாரவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
2025 ஜனவரியில் அநுரகுமார திஸாநாயக்க சீனாவுக்கு மேற்கொண்ட உத்தியோகப்பூர்வ அரச பயணத்தையும் இந்த செய்தியில் அவர் நினைவு கூர்ந்தார்.
இதேவேளை, சீனப் பிரதமர் லீ கியாங், பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு சுதந்திர தின வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.























