• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நீ சிரித்து நான் பார்த்ததே இல்லை - எப்ஸ்டீன் ஃபைல்ஸ் பற்றிய கேள்விக்கு பெண் செய்தியாளருக்கு ட்ரம்ப் பதில்

சினிமா

அமெரிக்க நீதித்துறை எப்ஸ்டீன் தொடர்பான சுமார் 30 லட்சம் பக்க ஆவணங்கள், 2,000 வீடியோக்கள் மற்றும் 1.8 லட்சம் படங்களை ஜன.31ம் தேதி வெளியிட்டது. இதில் உலகின் பல செல்வாக்குமிக்க மனிதர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல் பில் கிளிண்டன், இளவரசர் ஆண்ட்ரூ, பிரதமர் மோடி, பில் கேட்ஸ், எலான் மஸ்க், ரிச்சர்ட் பிரான்சன் போன்றோரின் பெயர்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

இதனால் இந்த எப்ஸ்டீன் ஃபைல்ஸ் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த எப்ஸ்டீன் ஃபைல்ஸ் தரவுகள் வெளியான பிறகே அமெரிக்கா- இந்தியா இடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது என்றும் ட்ரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த எப்ஸ்டீன் ஃபைல்ஸ் தொடர்பாக பெண் நிரூபர் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு, நீ சிரித்து நான் பார்த்ததே இல்லை என ட்ரம்ப் பதில் அளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

"எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட பெண்களில் பலர், இப்போது வெளியாகியுள்ள திருத்தப்பட்ட ஆவணங்கள் குறித்து அதிருப்தியில் உள்ளனர். சில முழுமையான சாட்சி நேர்காணல்கள் கூட முற்றிலும் மறைக்கப்பட்டுள்ளன. அவர்கள் இன்னும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?" என்ற கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், "நீங்கள் மிகவும் மோசமான செய்தியாளர். அதனால்தான் CNN-க்கு யாரும் ரேட்டிங் கொடுப்பதில்லை" என்று சாடினார்.

ஓவல் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் CNN செய்தியாளர் கைட்லான் காலின்ஸ் ட்ரம்பிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு காலின்ஸைப் பார்த்து, "நான் உங்களை 10 ஆண்டுகளாக அறிவேன், ஆனால் உங்கள் முகத்தில் ஒரு சிரிப்பைக்கூட நான் பார்த்ததில்லை. நீங்கள் ஏன் சிரிப்பதில்லை தெரியுமா? நீங்கள் உண்மையைச் சொல்வதில்லை என்பது உங்களுக்கே தெரியும்" என்று தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சித்தார்.

மேலும் இந்த விவகாரத்தைத் தொடர்ந்து கிளறுவது தேசத்திற்கு நல்லதல்ல என்றும், இதிலிருந்து மக்கள் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் என்றும் தெரிவித்தார். இதுதொடர்பாக பேசிய ட்ர்ம்ப், "எப்ஸ்டீன் மற்றும் பிறரால் எனக்கு எதிராக செய்யப்பட்ட சதி தவிர வேறு எதுவும் என்னைப் பற்றி வெளிவரவில்லை, இப்போது நாடு வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கிறேன்." என்று தெரிவித்தார்.

இந்த சம்பவம் நடந்த 45 நிமிடங்களுக்குள், சிஎன்என் (CNN) நிறுவனம் கெய்ட்லான் காலின்ஸிற்கு ஆதரவாக ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில்,

"அவர் ஒரு தனித்துவமான பத்திரிகையாளர், வெள்ளை மாளிகையிலிருந்தும் களத்திலிருந்தும் ஒவ்வொரு நாளும் மிக ஆழமாகவும், மன உறுதியுடனும் செய்திகளை வழங்குகிறார். தனது செயல்திறனை செய்தி வாசிப்பாளராகவும், சிஎன்என் தளங்களிலும் ஒவ்வொரு நாளும் மிகத் திறமையாக வெளிப்படுத்துகிறார், உலகெங்கிலும் உள்ள நேயர்களுக்கு யாரை நம்பலாம் என்று தெரியும்" எனக் குறிப்பிட்டுள்ளது. 
 

Leave a Reply