• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிளிநொச்சியில் சுதந்திர தின கரிநாள் போராட்டம் ஆரம்பம்

இலங்கை

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினமான இன்றைய தினத்தை தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கில் கரிநாளாக அறிவித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்த வகையில், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் சிங்கள – பௌத்த மயமாக்கப்படுதல், இந்தப் பகுதிகளில் தமிழர்களைச் சிறுபான்மையினராக்கும் நோக்கில் திட்டமிட்ட குடியேற்றங்கள், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி, இறுதிப் போரின்போது நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலைக்கு நீதி, தமிழ் மக்களுக்கான நிலையான அரசியல் தீர்வு என்பவற்றை வலியுறுத்தியே வடக்கு – கிழக்கில் இன்று போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.

குறித்த போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், வடக்கு – கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம், பொது அமைப்புகள், வணிகர் சங்கங்கள், கடற்றொழிலாளர் அமைப்புகள், சமூக நிறுவனங்கள் எனப் பல அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
 

Leave a Reply