அடுத்த சிம்பொனியை எழுதி முடித்த இளையராஜா
சினிமா
இசைஞானி இளையராஜா தனது நீண்ட இசைப்பயணத்தில் சுமார் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்துள்ளார்.
மேற்கத்திய இசை மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவரான இளையராஜா மொசார்ட் உள்ளிட்ட மேற்கத்திய இசை ஜாம்பவான்களின் சிம்பொனி இசைக் கூறுகளை தனது பாடல்களில் பயன்படுத்தி பாமர மக்களும் அவற்றை ரசிக்கும் வகையில் மெட்டுகளை அமைத்தார்.
அவரது இசையால் பல திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக மாறியுள்ளன. அவரது பாடல்கள் அனைத்தும் இன்றைய தலைமுறையையும் கவரும் வகையில் அமைந்துள்ளன.
கடந்த ஆண்டு லண்டனில் 'வேலியண்ட்' (Valiant) என்ற தனது சிம்பொனியை இளையராஜா அரங்கேற்றம் செய்தார்.
'சிம்பொனி – சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா – பொன்விழா ஆண்டு 50' என்ற தலைப்பில் தமிழக அரசு அவருக்கு பாராட்டு விழா நடத்தியது.
இதற்கிடையே தனது அடுத்த சிம்பொனியை எழுதி வருவதாக கடந்த ஆண்டு தீபாவளி வாழ்த்துடன் இளையராஜா வீடியோ வெளியிட்டு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அடுத்த சிம்பொனியை எழுதி முடித்துவிட்டதாக இளையராஜா அறிவித்துள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில், பிப்.3, 2026 உடன் புதிய ஸ்டூடியோவிற்கு வந்து, ஐந்தாண்டுகள் நிறைவடையவிருக்கிறது. என்னுடைய இரண்டாவது சிம்பொனியையும் கிட்டதட்ட எழுதி முடித்துவிட்டேன் எனக் கூறியுள்ளார்.
ஒரு கதை அல்லது ஒரு சம்பவம் அல்லது ஒரு நிகழ்ச்சியை இசை வடிவத்தில் நான்கு பகுதிகளாக சொல்வதற்கு பெயர்தான் சிம்பொனி. சிம்பொனி என்பது ஒரு ஆர்கஸ்ட்ரா வகை ஆகும்.























