வடக்கு கல்வி சாரா ஊழியர்களின் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடல்
இலங்கை
வடக்கு மாகாண கல்விசாரா ஊழியர்களின் பிரச்சனைகள் தொடர்பில், இலங்கை கல்விசாரா ஊழியர் சங்கத்தின் வடக்கு மாகாணப் பிரதிநிதிகளுக்கும் ஆளுநருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று மாலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது ஊழியர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த ஆளுநர், வடக்கு மாகாண அதிகார எல்லைக்குள் தீர்க்கப்படக்கூடிய பிரச்சனைகளைச் சாதகமாகப் பரிசீலித்து, அதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதேவேளை, வடக்கு மாகாண அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டதும், தேசிய ரீதியாகக் கொள்கை அளவில் தீர்க்கப்பட வேண்டியதுமான பிரச்சனைகளை, இலங்கை கல்விசாரா ஊழியர்களின் சங்கத்தினூடாக மத்திய அரசின் உரிய அமைச்சுக்களுடன் அணுகித் தீர்த்துக்கொள்ளுமாறும், அதற்கு உறுதுணையான ஒத்துழைப்புக்களை வழங்கக் கூடியதாக இருக்கும் என்றும் ஆளுநர் இதன்போது குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்), வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர், ஆளுநர் செயலக நிர்வாக அலுவலர், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.























