திரைத்துறையில் 25 ஆண்டுகள் - சினிமாவுடனான என் காதல் பயணம் தொடர்கிறது - இயக்குநர் கவுதம் மேனன்
சினிமா
தமிழ் திரையுலகில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் கவுதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி சில தினங்களுக்கு முன் சிறப்பு இசைக்கச்சேரி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் திரைத்துறையை சேர்ந்தவர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
"கால் நூற்றாண்டு காலக் காட்சிகளும் உணர்வுகளும்: திரைப்படம் என்பது வெறும் அசைவு படங்களை பதிவு செய்வது மட்டுமல்ல, அது காலத்தையே பதிவு செய்வது என்று அடிக்கடி சொல்லப்படுவதுண்டு. நான் முதன்முதலில் "ஆக்ஷன்" என்று குரல் கொடுத்த நாளிலிருந்து இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவடைவதை குறிக்கும் இந்த தருணத்தில், கடந்து போன காலத்தால் அல்ல, அந்த காலம் எனக்கு வாரி வழங்கிய நினைவுகளின் பெருக்கத்தால் நான் திக்குமுக்காடி போகிறேன்.
இந்த அற்புதமான, சவால்கள் நிறைந்த துறையில் இருபத்தைந்து ஆண்டுகள் என்பது ஒரு தனிப்பட்ட சாதனை அல்ல. அது, என்னுடன் பயணித்த எண்ணற்ற தனிநபர்களின் கனவுகள், அர்ப்பணிப்பு மற்றும் திறமையால் நெய்யப்பட்ட ஒரு கலைப்படைப்பு.
எனது ஆழ்ந்த நன்றியும் அன்பும் கலைஞர்களுக்கே உரித்தானது: என் மனதில் இருந்த கற்பனை கதாபாத்திரங்களுக்கு ஒரு ஆன்மாவையும், ஒரு குரலையும், ஒரு இதய துடிப்பையும் வழங்கிய நடிகர்களே. என் வார்த்தைகளுக்கு நீங்கள் உயிர் கொடுத்தீர்கள்; பல சமயங்களில், கதாபாத்திரங்களில் நான் உணராத ஆழங்களை கண்டறிந்தீர்கள்.
என் படக்குழுவினருக்கு: இருபத்தைந்து ஆண்டுகளாக என்னுடன் கேமராவுக்கு பின்னால் நின்ற, என் கற்பனையின் அமைதியான சிற்பிகளே, உங்களுக்கான என் நன்றியும் மரியாதையும், சினிமா மீது நாம் கொண்டுள்ள அன்பை போலவே ஆழமானது.
நான் ஜாம்பவான்களின் தோள்களின் மீது நிற்கிறேன்; யாருடைய படைப்புகள் எனக்குள் அந்த தீப்பொறியை பற்ற வைத்ததோ, அந்த திரைப்பட மேதைகளுக்கும், என் ஆரம்ப கால படிகளுக்கு வழிகாட்டிய என் வழிகாட்டிகளுக்கும் - எனக்கு வழி காட்டியதற்கு நன்றி.
என் சமகாலத்தவர்களுக்கும் சக இயக்குநர்களுக்கும், உங்கள் படைப்புகள் தினமும் எனக்கு சவாலையும் உத்வேகத்தையும் அளிக்கின்றன. கதை சொல்லும் இந்த பொதுவான பயணத்தில் நாம் பகிர்ந்துகொள்ளும் தோழமை விலைமதிப்பற்றது.
இறுதியாக, என் அன்பான ரசிகர்களுக்கு. என் கதைகளை உங்கள் வாழ்வில் ஏற்றுக்கொண்டீர்கள், என் கதாபாத்திரங்களை உங்கள் உரையாடல்களில் வாழ அனுமதித்தீர்கள், நான் சித்தரிக்க முயன்ற அன்பு, மோதல்கள் மற்றும் வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களை தழுவிக்கொண்டீர்கள். உங்கள் அங்கீகாரமே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வெகுமதி.
#YennoduVaaVeeduVaraikkum இசை நிகழ்ச்சியில் ஒரு நம்பமுடியாத மற்றும் மறக்க முடியாத இரவை வழங்கியதற்கு நன்றி.
நான் ஏன் இதை செய்கிறேன் என்பதை அறிந்துகொள்ள அது ஒரு ஆத்மார்த்தமான நினைவூட்டலாக இருந்தது.
சினிமாவுடனான என் காதல் பயணம் தொடர்கிறது. அடுத்த காட்சி காத்திருக்கிறது...," என குறிப்பிட்டுள்ளார்.






















