அமெரிக்காவின் வர்த்தக நெருக்கடிகளுக்கு மத்தியிலும் F-35 விழாவில் பங்கேற்கும் கனடிய இராணுவம்
கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே மீண்டும் வர்த்தக பதற்றங்கள் அதிகரித்துள்ள சூழலிலும், கனடிய ஆயுதப் படைகள் இன்று டெக்சாஸில் நடைபெறவுள்ள ஒரு விழாவில் பங்கேற்கின்றன.
கனடாவின் முதல் F-35 போர் விமானம் விரைவில் வரவிருப்பதை கொண்டாடும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், அமெரிக்க தயாரிப்பான இந்த போர் விமானங்களை கனடா மொத்தம் எத்தனை வாங்கும் என்பதை ஒட்டாவா இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
கனடா மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் வர்த்தக மற்றும் அரசியல் மோதல்கள் காரணமாக, CF-18 விமானங்களுக்கு மாற்றாக கொண்டுவரப்படும் இந்தத் திட்டத்தின் எதிர்காலம் மறுபரிசீலனையில் இருக்கும் வேளையில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
சமீபத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடிய தயாரிப்பு விமானங்களுக்கு சான்றிதழ் வழங்க மறுப்பதாகவும், வரி விதிக்கப்போவதாகவும் எச்சரித்திருந்தார்.
மேலும், கனடா சீனாவுடன் ஏதேனும் ஒப்பந்தம் செய்தால், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 100 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள இந்த விழாவானது, கனடாவின் முதல் F-35 விமானம் ஃபோர்ட் வொர்த்தில் உள்ள லாக்ஹீட் மார்ட்டின் (Lockheed Martin) உற்பத்தி தளத்தில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக அமையும்.
ராயல் கனடிய விமானப்படையின் (RCAF) தளபதி லெப்டினன்ட்-ஜெனரல் ஜேமி ஸ்பைசர்-பிளான்செட் (Lt.-Gen. Jamie Speiser-Blanchet), கனடாவின் முதல் F-35 விமானத்தில் பொருத்தப்படவுள்ள உடற்பகுதி பாகத்தில் கருப்பு மையினால் கையெழுத்திடுவார்.
தேசிய பாதுகாப்புத் துறையின் கூற்றுப்படி, இந்த நிகழ்வு விமானத்தின் உற்பத்தியில் மற்றொரு மைல்கல்லைக் குறிக்கும்.
இந்த விமானங்கள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் கனடிய விமானப்படையிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம், F-35 விமானங்களை ஆர்டர் செய்யும் ஒவ்வொரு நட்பு நாடுகளுக்காகவும் இத்தகைய விழாக்களுக்கு ஏற்பாடு செய்வது வழக்கமாகும்.























