• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் ஆர்ப்பாட்டம்

இலங்கை

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காமையினால், இன்று (02) முற்பகல் முதல் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் ஆர்ப்பாட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினருடன் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதாக இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று 8வது நாளாகவும் தொடர்கிறது.

பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களை, ஆசிரியர் சேவையில் உள்ளீர்க்குமாறு கோரி அவர்கள் அண்மையில் சத்தியாக்கிரகம் ஒன்றை ஆரம்பித்திருந்ததுடன், பின்னர் அது சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டமாகத் தீவிரப்படுத்தப்பட்டது.

அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நாளை (03) ஜனாதிபதியுடன் சந்திப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் கூறுகிறது.

எவ்வாறாயினும், தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க அதிகாரிகள் தவறியுள்ளமையினால் இன்று இவ்வாறானதொரு போராட்டத்தை முன்னெடுப்பதாக அந்தச் சங்கத்தின் விராஜ் மனரங்க தெரிவித்தார்.

இதேவேளை, சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட அக்கட்சியின் பிரதிநிதிகள் சிலர், இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள உறுப்பினர்களைச் சந்திக்கச் சென்றிருந்தனர்.

இதனிடையே, பத்தரமுல்ல இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சிற்கு முன்னால் கல்வியியல் பட்டதாரிகள் ஒன்றியத்தினாலும் ஆர்ப்பாட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அரச பல்கலைக்கழகங்களில் கல்வியியல் பட்டம் பெற்றவர்களை உடனடியாக ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கோரியே இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவ்வமைப்பு தெரிவிக்கிறது.

இதற்கிடையில், கல்வித்துறையில் 43,000 ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்ற போதிலும், அதனை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

Leave a Reply