LCU முடிந்துவிடவில்லை... இதற்கு அடுத்து கைதி 2 தான் - லோகேஷ் கனகராஜ்
சினிமா
மாநகரம், மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்பட்டது.
'கைதி' திரைப்படம் இந்தியில் 'போலா' என்ற பெயரில் ரீமேக் ஆகி வெளியானது. தற்போது மலாய் மொழியில் கைதி படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
கூலி படத்திற்கு கைதி 2 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய படத்தை இயக்குவதாக அதிகாரபூர்வ தகவல் வெளியானது.
இதனிடையே, கைதி 2 படம் கைவிடப்பட்டதாக இணையத்தில் தகவல் பரவியது. கூலி படத்துக்காக ரூ.50 கோடி சம்பளம் பெற்ற லோகேஷ் கனகராஜ் கைதி 2 படத்திற்கு ரூ.75 கோடி வரை கேட்டதாகவும் இதனை கேட்டு தயாரிப்பு நிறுவனம் பின்வாங்கியுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய லோகேஷ் கனகராஜ், "நான் அதிக சம்பளம் கேட்டதால் 'கைதி 2' படத்திலிருந்து விலகிவிட்டதாகச் சிலர் சொல்கிறார்கள், மேலும் சிலர் LCU முடிந்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.
இப்போது நான் ஒன்றை தெளிவுபடுத்துகிறேன். அல்லு அர்ஜுன் சார் படத்திற்குப் பிறகு எனது அடுத்த படம் 'கைதி 2' தான். 'கைதி 2', 'விக்ரம் 2' மற்றும் ரோலக்ஸ் ஆகிய படங்களை எடுத்து முடிக்காமல் நான் சினிமாவில் இருந்து விலகமாட்டேன். LCU மிக விரைவில் திறக்கப்படும். பென்ஸ் படமும் LCU-வைச் சேர்ந்ததுதான்" என்று தெரிவித்தார்.























