கனடாவில் இந்தப் பகுதியில் கொள்ளைச் சம்பவங்கள் குறித்து எச்சரிக்கை
கனடா
டர்ஹம் பிராந்தியத்தில் வீடுகளில் உட்புகுந்து திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்களுக்கு டர்ஹம் பிராந்திய காவல்துறை பாதுகாப்பு எச்சரிக்கை அறிவித்துள்ளது.
மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், சமீபத்தில் நடந்த ஒரு திருட்டு சம்பவத்தின் வீடியோ பதிவை பொலிஸார் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது.
43 விநாடிகள் கொண்ட அந்த வீடியோவில், கருமையான உடை அணிந்த இருவர் ஒரு வீட்டின் பின்புற வேலியைத் தாண்டி உள்ளே நுழைவதும், பின்னர் வீட்டின் முக்கிய மாடி மற்றும் அடித்தளப் பகுதிகளில் சுற்றி நடந்து விட்டு வெளியேறுவதும் பதிவாகியுள்ளது.
மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சந்தேகத்திற்கிடமான நபர்கள், வாகனங்கள் அல்லது நடவடிக்கைகள் எதுவும் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் அளிக்க வேண்டும் என டர்ஹம் பிராந்திய பொலிஸார் கோரியுள்ளனர்.
மேலும், சந்தேகநபர்களின் அடையாள விவரங்கள், அவர்கள் பயன்படுத்தும் வாகனத்தின் வகை, மாடல் மற்றும் பதிவு எண் போன்றவற்றை இயன்றவரை குறிப்பெடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உடனடி தகவல் அளிப்பது, நடந்து வரும் விசாரணைகளுக்கு பெரிதும் உதவுவதோடு, குற்றச் சம்பவங்களின் முறை மற்றும் சந்தேகநபர்களை அடையாளம் காணவும் உதவுகிறது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.























