• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்.. அதிபர் மதுரோ சிறை பிடிப்பு - ரஷியா, ஈரான் கண்டனம்

வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருள் கடத்தப்படுவதாகவும், இதற்கு வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வந்தார்.

இதையடுத்து வெனிசுலா படகுகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது. வெனிசுலாவை சுற்றி கரீபியன் கடல்பகுதியில் அமெரிக்கா தனது படைகளை குவித்தது.

வெனிசுலா அதிபர் பதவியில் இருந்து மதுரோ வெளியேற வேண்டும் என்று டிரம்ப் நேரடியாக எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் இன்று (ஜனவரி 3) அமெரிக்க ராணுவத்தினர் வெனிசுலாவின் தலைநகரான கராகஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரிய அளவிலான வான்வழித் தாக்குதல் நடத்தினர்.

கராகஸில் உள்ள முக்கிய ராணுவ தளமான பியூர்டே தியுனா, லா கார்லோட்டா விமான தளம் மற்றும் லா குவைரா துறைமுகம் உள்ளிட்ட பல ராணுவ மற்றும் உள்கட்டமைப்பு இடங்கள் தாக்கப்பட்டன.

இதன்பின், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பில், "அமெரிக்கா, வெனிசுலா மற்றும் அதன் தலைவர் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீது ஒரு பெரிய அளவிலான தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

அதிபர் மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு, நாட்டிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்கத் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது" என்று தெரிவித்தார்.

மதுரோ மீது அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றவியல் வழக்குகள் உள்ளதால் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று தெரிகிறது.

இந்நிலையில் வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு ரஷியா, ஈரான், மற்றும் ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ரஷிய வெளியுறவு அமைச்சகம் இந்தத் தாக்குதலை வெனிசுலா மீதான ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பு என்று கண்டித்துள்ளது. இது சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என்றும் தங்களின் அரசியல் சித்தாந்தத்திற்காக அமெரிக்கா இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

வெனிசுலாவின் நெருங்கிய நட்பு நாடான ஈரான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தத் தாக்குதல் வெனிசுலாவின் இறையாண்மையையும் அதன் பிராந்திய ஒருமைப்பாட்டையும் அப்பட்டமாக மீறும் செயல் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை அமெரிக்கா மீறியுள்ளது என தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலை பெரும் கவலையுடன் கவனித்து வருவதாகவும், நிலைமையை ஆராய அவசரக் குழுவைக் கூட்டியுள்ளதாகவும் ஜெர்மனி வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இப்பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காண மத்தியஸ்தம் செய்ய தயாராக உள்ளதாக ஸ்பெயின் அரசு ஸ்பெயின் அரசு அறிவித்துள்ளது.

மேலும் கொலம்பியா, கியூபா உள்ளிட்ட நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே, வெனிசுலாவில் தற்போது தேசிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 
 

Leave a Reply