தொல்லியல் திணைக்களத்தின் பதாகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பில் கைதான மூவருக்கு பிணை
இலங்கை
மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட தாந்தாமலை பகுதியில் நடப்பட்டிருந்த தொல்லியல் திணைக்களத்தின் பதாகைகளை அகற்றிய குற்றச்சாட்டில் கைதான மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட தாந்தாமலை பகுதியில் நடப்பட்டிருந்த தொல்லியல் திணைக்களத்தின் பதாகைகளை அகற்றியமை தொடர்பில், பட்டிப்பளை பிரதேச சபையின் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர், தாந்தாமலை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர் ஆகிய மூவரும் கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் இன்று(26) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது வழக்கை விசாரணை செய்த நீதவான் அண்ணத்துரை தர்ஷினி, மூவரையும் தலா இருபத்தைந்து இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதித்தார்.
அத்துடன், இவ்வழக்கு விசாரணை எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.























