யாழ்.பல்கலைக்குப் புதிதாக பேரவை உறுப்பினர் நியமனம்
இலங்கை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவைக்குப் புதிய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளரான குமாரசாமி சத்தியகுமார் என்பவரே உடனடியாகச் செயற்படும் வகையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் நியமிக்கப்பட்ட பேரவை உறுப்பினர்களில் தொடர்ச்சியாக மூன்று கூட்டங்களுக்கு வராத உறுப்பினர் ஒருவரின் வெற்றிடமான இடத்தின் எஞ்சிய காலப்பகுதிக்கு - 2028 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் நியமனத்துக்காக மூன்று பேரைத் தெரிவு செய்து, ஜனாதிபதிக்குப் பரிந்துரைப்பதற்கான தெரிவுக் கூட்டம் எதிர்வரும் டிசெம்பர் 09 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பேரவையில் வெற்றிடமாக இருந்த இடத்தை நிரப்புவதற்குப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந் நியமனத்தை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.























