வாலியின் வாழ்வை வளமாக்கிய இசைப்பேரரசி!
சினிமா
மறைந்த கவிஞர் வாலி ஒரு பேட்டியில் சொன்னார், “நான் எழுதிய ஏழாயிரம் பாடல்களில் ஈராயிரம் பாடல்களை பாடியவர் பி.சுசீலா”.
1958-ல் வெளிவந்த அழகர் ‘மலைகள்ளன்’ படத்தில் “நிலவும் தாரையும் நீயம்மா” என்ற தாலாட்டுப் பாடல் தான் வாலி எழுதிய முதல் பாடல். அதை பாடியவர் பி.சுசீலா. ஒருவர் மேல் இன்னொருவர் நல்ல மரியாதை வைத்திருந்தார்கள்.
ஒரு விழாவில் வாலி இப்படிப் பேசினார். “என் முதல் பாடலைப் பாடி என் வாழ்வில் வெற்றியை வர வைத்தவர் பி.சுசீலா அவர்கள்”.
எனவே, வாழ்க்கையில் வெற்றி பெற நினைக்கும் கவிஞர்களே, இசை அமைப்பாளர்களே, உங்கள் முதல் பாடலை பி.சுசீலாவை வைத்து பாட வையுங்கள். அதிர்ஷ்டம் தேடி வரும்" என்பது போல் பேசினார்.
வாலி எம்,ஜி.ஆருக்கு முதலில் பாடல் எழுதியது 'நல்லவன் வாழ்வான்' படத்தில். அதன் பிறகு அவர் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான கவிஞராக இருந்தார். “சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்” என்ற அந்தப் பாடலை பாடியவர் பி.சுசீலா.
எம்.எஸ்.வியுடன் இணைந்த முதல் படம் “இதயத்தில் நீ”. அதில் இடம் பெற்ற பெண்குரல் பி.சுசீலாவின் குரல் (உறவு என்றொரு சொல் இருந்தால்).
‘கற்பகம்’ படத்துக்கு ஒரு தனித்துவம் உண்டு. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கி, கே.ஆர்.விஜயா அறிமுகமான அந்தப் படத்தில் பி.சுசீலா மட்டுமே 5 பாடல்களையும் பாடினார்.
வேறு பெண் குரலோ, ஆண் குரலோ இல்லை. அந்தப் பாடல்களை எழுதியவர் வாலி. கே.எஸ்.ஜிக்கு அவர் பாடல் எழுதிய முதல் படம் அது தான்.
கே.வி.மகாதேவன் அவர்களுக்காக முதலில் எழுதிய படம் "நீங்காத நினைவு" படத்தில் வரும் "சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே". அதை பாடியவர்கள் பி.சுசீலாவும் எல்.ஆர்.ஈஸ்வரியும்.
மத்திய அரசு 1969-ல் இருந்து பின்னணி பாடகிகளுக்கும் தேசிய விருது வழங்கி வருகிறது. அறிவிக்கப்பட்ட முதல் விருதை பெற்றுக்கொண்டவர் பி.சுசீலா.
“நாளை இந்த வேளை பார்த்து” என்ற அந்த பாடலை எழுதியவர் வாலி அவர்கள்.
இளையராஜா அவர்களுக்கு வாலி எழுதிய முதல் பாடல், பத்ரகாளி படதில் வரும் “கண்ணன் ஒரு கைக்குழந்தை” பாடல். அதுவும் பி.சுசீலா, ஜேசுதாஸ் பாடியது.
திரை இசையில் தனது முப்பதாவது வருடத்தை 1988-ல் நிறைவு செய்தார் வாலி. அந்த நாளில் அவர் தனது முதல் பாடலை பாடிய பி.சுசீலாவே அன்றும் பாட வேண்டும் என விரும்பி இளையராஜாவிடம் கூற, இளையராஜா அதை ஏற்றுக்கொண்டு, “தூரி தூரி தும்மக்க தூரி” என்ற பாடலை பாட வைத்தார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கூட, வாலி எழுதிய "கப்பலேறி போயாச்சு" என்ற பாடலை பி.சுசீலா பாடி இருக்கிறார்.
வாலி எழுதிய மிக அருமையான பாடல்களை பி.சுசீலா அவர்கள் பாடி இருக்கிறார்கள்..
Prashantha Kumar






















