முச்சக்கர வண்டி மீது முறிந்து வீழ்ந்த மரம் - ஒருவர் உயிரிழப்பு, மூவர் காயம்
இலங்கை
மாவனெல்ல – ரம்புக்கன வீதியில் தலகொல்ல பகுதியில் நேற்று இரவு (23) முச்சக்கர வண்டி மீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்றிரவு 09.20 மணியளவில் குறித்த வீதியூடாக பயணித்த முச்சக்கர வண்டியின் மீதே மரம் முறிந்து வீழ்ந்துள்ளது.
இதனால், முச்சக்கர வண்டியில் பயணித்த சிறு குழந்தை உட்பட நான்கு பயணிகள் சிக்கிக் கொண்ட நிலையில், பின்னர், பொலிஸாரின் உதவியுடன் உள்ளூர்வாசிகளால் மீட்கப்பட்டனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மாவனெல்ல ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு முச்சக்கர வண்டியின் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இரண்டரை வயது குழந்தை, 48 வயது பெண் மற்றும் 57 வயது ஆண் உள்ளிட்ட மூவரும், தற்சமயம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காயமடைந்த ஏனைய நபர்கள், மாவனெல்ல, லொல்லேகொட பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார்.
இந்த சம்பவத்தில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு லொறி மற்றும் அருகிலுள்ள வர்த்தக நிலையமும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதனிடையே, மரம் முறிந்து விழுந்ததால் தலகொல்ல பகுதியினூடான போக்குரவத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவிறுத்தியுள்ளனர்.























