மூடுபனியால் திருப்பி விடப்பட்ட விமானங்கள்
இலங்கை
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (19) அதிகாலை தரையிறங்க திட்டமிடப்பட்ட மூன்று சர்வதேச விமானங்கள், அடர்த்தியான மூடுபனி காரணமாக, தெரிவுநிலை கணிசமாகக் குறைந்ததால் திருப்பி விடப்பட்டன.
இவ்வாறு திருப்பி விடப்பட்ட விமானங்களில் சீனாவின் குவாங்சோவிலிருந்து வந்த UL-881 விமானமும், சவுதி அரேபியாவின் ரியாத்திலிருந்து வந்த UL-266 ஆகிய விமானமும் அடங்கும்.
அவை மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.
மேலதிகமாக சவுதி அரேபியாவின் தமாமில் இருந்து வந்த UL-254 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
பின்னர், விமானப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த மூடுபனி தணிந்ததால், விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் தரையிறங்க முடிந்தது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயணிகள், பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், தெரிவுநிலை மேம்பட்டவுடன் வழக்கமான செயல்பாடுகள் மீண்டும் தொடங்கப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.























