புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்து விபத்து - 42 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அச்சம்
லிபியா நாட்டிலிருந்து புறப்பட்ட புலம்பெயர்வோர் படகொன்று கடலில் கவிழ்ந்ததில் 42 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக ஐ.நா அமைப்பின் புலம்பெயர்தல் ஏஜன்சி தெரிவித்துள்ளது.
இம்மாதம் 3ஆம் திகதி, வட ஆப்பிரிக்க நாடான லிபியா நாட்டிலுள்ள Zuwara என்னுமிடத்திலிருந்து 47 ஆண்கள், இரண்டு பெண்கள் என மொத்தம் 49 பேருடன் புலம்பெயர்வோர் படகொன்று புறப்பட்டுள்ளது.
சில மணி நேரத்துக்குள் படகின் எஞ்சின் பழுதாக, கடல் அலையில் சிக்கி படகு கவிழ்ந்துள்ளது.
சனிக்கிழமையன்று லிபியா அதிகாரிகள் நடத்திய தேடுதல் வேட்டையில் ஏழு பேர் மட்டும் கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பது தெரியவர, அவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்கள்.
மீதமுள்ள 42 பேரைக் காணவில்லை. அவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அந்தப் படகில் பயணித்தவர்களில் 29 பேர் சூடான் நாட்டவர்கள், 8 பேர் சோமாலியா நாட்டவர்கள், மூன்று பேர் கேமரூன் நாட்டவர்கள் மற்றும் இரண்டு பேர் நைஜீரியாவைச் சேர்ந்தவர்கள் என புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.























