இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த துருக்கி
பாலஸ்தீனத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் ராணுவம் போர் தாக்குதல் நடத்தியது. 2 ஆண்டுகளாக நீடித்த இந்தப் போர் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையீட்டால் முடிவுக்கு வந்தது. இருப்பினும், அங்கு அவ்வப்போது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தப் போரில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியைச் சேர்ந்த 66,000 பே்ா கொல்லப்பட்டனர். சுமார் 20,000 பேர் பசி, பட்டினியால் தவிக்கவிடப்பட்டனர்.
இந்நிலையில், காசாவில் இனப்படுகொலை நடத்தியதற்காக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு துருக்கி கோர்ட் பிடிவாரண்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
காசா மீதான இரக்கமற்ற தாக்குதல் மற்றும் இனப்படுகொலை தொடர்பாக இஸ்தான்புல் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. இதில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, ராணுவ மந்திரி காட்ஸ், ராணுவ தளபதி இயால் ஜமீர் உள்ளிட்ட 37 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
விசாரணை இறுதியில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த கைது வாரண்ட் குறித்து ஹமாஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால் இது வெறும் விளம்பரம் என இஸ்ரேல் விமர்சித்துள்ளது.
ஏற்கனவே காசா மீதான இனப்படுகொலை காரணமாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு சர்வதேச கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.






















