ஒரு வகுப்பில் 25-30 மாணவர்களே இருக்க வேண்டும் -பிரதமர்
இலங்கை
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, பாரம்பரிய பரீட்சை முறைக்கு மாற்றாக தொகுதி முறை (Module) கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாக அறிவித்துள்ளார். மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவதே இதன் முக்கிய நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.
2026ஆம் ஆண்டு முதல் புதிய கல்விச் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும். இதற்கான விழிப்புணர்வு நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ மற்றும் தேசிய கல்வி நிறுவன பணிப்பாளர் கலாநிதி அசோக டி சில்வா ஆகியோர் விளக்கமளித்தனர்.
முக்கிய அம்சங்கள்:
கற்றல் மற்றும் மதிப்பீடு:
“ஆசிரியர், பெற்றோர், மாணவர்கள் அனைவரும் பரீட்சைக்கான பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். தொகுதி முறையில் பல்வேறு செயல்பாடுகளின் மூலம் கற்றலுக்கும் மதிப்பீட்டுக்கும் வாய்ப்பு வழங்கப்படும்,” என்று பிரதமர் கூறினார்.
க.பொ.த சாதாரண தரம்:
புதிய பாடத்திட்டம் அடிப்படையில் 2029ஆம் ஆண்டில் மட்டுமே க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடத்தப்படும்.
சீர்திருத்த அமுலாக்கம்:
2026ஆம் ஆண்டில் முதற்கட்டமாக 1ஆம் வகுப்பு மற்றும் 6ஆம் வகுப்புகளில் புதிய கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். மூன்று ஆண்டுகளுக்குப் பின் ஏற்படும் சிக்கல்களுக்கு ஏற்ப திருத்தங்கள் செய்யப்படும் எனவும் சீர்திருத்தம் இறுதியானது அல்ல எனவும் கூறப்பட்டது.
வகுப்பறை மாணவர் எண்ணிக்கை:
ஒரு வகுப்பில் 25-30 மாணவர்களே இருக்க வேண்டும் என்ற இலக்கு வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொண்ட வகுப்பறைகள் குறைக்கப்படும்.
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை:
இதுவரை ரத்து செய்ய எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. முதலில் பாடசாலைகளுக்கு இடையிலான வேறுபாடுகளை நீக்கவேண்டும் எனவும், பரீட்சையால் மாணவர்களுக்கு ஏற்படும் அழுத்தத்தை குறைப்பதே நோக்கம் எனவும் பிரதமர் கூறினார்.
முன்பள்ளி வளர்ச்சி மையங்கள்:
முன்பள்ளி குழந்தைப் பருவ வளர்ச்சி மையங்களின் கண்காணிப்பை கல்வி அமைச்சகம் நேரடியாக மேற்கொள்ளும்.
ஆசிரியர் பயிற்சி:
கல்விப் பிரதி அமைச்சர் மதுர சேனவிரத்ன, ஆசிரியர் பயிற்சிக்கு விசேட கவனம் செலுத்தப்படும் என்றும், ஆகஸ்ட் மாதத்தில் ஆசிரியர் பயிற்சிப் பாசறைகள் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்த சீர்திருத்தம் குறித்து பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் கல்வித் துறை சார்ந்தோரிடம் விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.






















