• Welcome to TamilsGuide
செய்திகள் 1

13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல் படுத்தப்படும்

இலங்கை

மறைந்த முன்னாள் ஜனாதிபதியான ரணசிங்க பிரேமதாச மாகாண சபை முறைமையை இல்லாது ஒழிப்பதற்கு ஒருபோதும் முயற்சிக்கவில்லை எனவும், 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல் படுத்தப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று மீண்டும் மன்னாரில் உறுதியளித்துள்ளார்.

மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சஜித் பிரேமதாச இன்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்திற்குச் சென்று கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனைச்  சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

குறித்த சந்திப்பினையடுத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே எதிர்க் கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” மன்னாரின் அபிவிருத்திக்காக மீண்டும் ஒரு முறை மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளேன். வடக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வு வழங்குவதே எனது நோக்கமாக உள்ளது.

முக்கியமாக நாட்டின் நீதிப்  புத்தகத்தில் உள்ள 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல் படுத்துவேன். மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவர்களின் பிரச்சனையை தீர்த்து அவர்களுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்கவுள்ளேன். எமது கடல் வளங்கள் கொள்ளையிடப்படுகின்றதை தடுக்கும் வகையில் நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்கவுள்ளேன்.

வடக்கு மக்களின் அரசியல் உரிமை, சமூக உரிமை, பொருளாதார உரிமை, மனித உரிமைகள் உட்பட அனைத்து உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் செயல்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளேன்.

இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் ஒரு தாய் பிள்ளைகள் போல் எமது பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டும். வடக்கு, கிழக்கில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

அவர்களுக்கான சிறந்த திட்டங்களை கொண்டு வர இருக்கிறேன். மீனவர்களின் பிரச்சினைக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க எண்ணியுள்ளதோடு
அதை வடக்கு கிழக்கை மையப்படுத்தி தீர்வை பெற்றுத் தருவேன்.

மாகாணசபை முறைமையை வலுப்படுத்தி அதை நிச்சயமாக பாதுகாக்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதோடு மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய வேளைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

மறைந்த எனது தந்தையார் ரணசிங்க பிரேமதாச மாகாண சபையை இல்லாது ஒழிப்பதற்கு ஒருபோதும் முயற்சிக்கவில்லை. அதே போன்று மாகாண சபை கட்டமைப்பை பாதுகாக்கவும் முயற்சிகளை மேற்கொள்ளுவேன்” இவ்வாறு எதிர்க் கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply