வலி .வடக்கில் தனியார் காணிக்குள் உள்ள இராணுவ விவசாய பண்ணைக்கு பெயர் பலகை நாட்டும் நடவடிக்கை
இலங்கை
யாழ்ப்பாணம் , வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிக்குள் காணப்படும் இராணுவத்தின் விவசாய பண்ணைக்கு புதிய பெயர் பலகை நாட்டும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
வலி. வடக்கில் இருந்து சுமார் 36 வருடங்களுக்கு மேலாக தனியார் காணிகளில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள நிலையில்,, தமது காணிகளை விடுவிக்குமாறு மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில், குரும்பசிட்டி பகுதியில் உள்ள தனியார் காணிகளில் இராணுவத்தினர் நீண்ட காலமாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த பகுதியை இராணுவத்தினரின் விவசாய பண்ணை பகுதியாக அறிவித்து பெயர் பலகை நாட்டும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளமை , அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
” மக்களின் காணி மக்களுக்கே … ” என அரசாங்கம் கூறிவரும் நிலையில் , வலி.வடக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் ஆராய்வதற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணம் வருகை தந்து ஆராய்ந்து சென்றுள்ள நிலையில் நாளை மறுதினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ள பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்ட கலந்துரையிடலில் காணி விடுவிப்பு தொடர்பில் முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டு , காணி உரிமையாளர்களுக்கு சாதகமான பதில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவத்தினர் தமது விவசாய பண்ணைக்கு பெயர் பலகை நாட்டும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.
அதேவேளை , வசாவிளான் இராணுவ வைத்தியசாலை கட்டுமானம் மற்றும் பருத்தித்துறை – கீரிமலை வீதியில் புதிதாக கட்டப்படும் இராணுவத்தினரின் சிற்றுண்டி சாலை கட்டுமானம் ஆகியவற்றை உடனடியாக நிறுத்துமாறு வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் யாழ்.மாவட்ட இராணுவ தளபதிக்கு எழுத்து மூல அறிவித்தல் அனுப்பியுள்ள நிலையிலும் குறித்த கட்டுமான பணிகள் தடையின்றி முழு உத்வேகத்துடன் நடைபெறுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.






















