ஆல்பர்ட்டா மாகாணத்துக்கு சுதந்திரம் கோரும் விவகாரம் - சமீபத்திய தகவல்
கனடா
கனடாவிடமிருந்து ஆல்பர்ட்டா மாகாணத்தை பிரிக்கும் விடயம் தொடர்பில், முறைப்படி மனு தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.
கனேடிய மாகாணங்களில் ஒன்றான ஆல்பர்ட்டா மாகாணம், இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு மாகாணமாகும்.
ஆனால், கனடாவுக்கு தாங்கள் தங்கள் வளம் மூலம் பெரிய அளவில் பங்களிப்பைச் செய்தும், பதிலுக்கு ஃபெடரல் அரசு தங்களை சரியாக கவனிப்பதில்லை, தங்கள் கருத்துக்கள் நாடாளுமன்றத்தில் எடுபடவில்லை என்னும் கருத்து ஆல்பர்ட்டா மக்களிடையே நிலவிவருகிறது.
ஆகவே, வளம் நிறைந்த ஆல்பர்ட்டா, கனடாவிலிருந்து பிரிந்து தன்னைத்தான் நிர்வகிக்கவேண்டும் என ஆல்பர்ட்டா மக்கள் கருதுகிறார்கள்.
இந்நிலையில், Stay Free Alberta என்னும் அமைப்பின் தலைவரான மிச் சில்வெஸ்டர் என்பவர், முறைப்படி அரசின் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று, ஆல்பர்ட்டா கனடாவிடமிருந்து பிரிவது தொடர்பில் புகார் மனு ஒன்றை உருவாக்கினார்.
அந்த மனு வாக்கெடுப்புக்கு விடப்படவேண்டுமானால், அது சுமார் 178,000 கையெழுத்துக்களைப் பெறவேண்டும்.
ஆனால், அந்த மனு 300,000 கையெழுத்துக்களைப் பெற்றுவிட்டதாக மிச் சில்வெஸ்டர் தெரிவித்துள்ளார்.
ஆகவே, அந்த மனு தற்போது முறைப்படி தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.
மனு அங்கீகரிக்கப்படும் நிலையில், அக்டோபர் மாதம் 19ஆம் திகதி அது வாக்கெடுப்புக்கு விடப்படலாம்!






















