10 இலட்சம் ரூபா பெறுமதியான முதிரை மரக்குற்றிகளுடன் சந்தேகநபர் கைது
இலங்கை
முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு முதிரை மரக்குற்றிகளை கடத்தி வந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி பொலிஸார் மீசாலை பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை, சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த பாரவூர்தியை வழிமறித்த சோதனையிட்டனர்.
அதன் போது, பாரவூர்திக்குள் முதிரை மர குற்றிகள் காணப்பட்டுள்ளன.
மரக்குற்றிகளை எடுத்து செல்வதற்கான அனுமதி பத்திரத்தினை சாரதியிடம் கோரிய போது , அதற்கான அனுமதி பத்திரத்தை வழங்காததை அடுத்து, சாரதியை பொலிஸார் கைது செய்ததுடன் , பாரவூர்தியையும் கைப்பற்றி பொலிஸ் நிலையம் எடுத்து சென்றனர்.
பொலிஸ் நிலையத்தில் சாரதியை தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் பாரவூர்திக்குள் இருந்து 43 முதிரை மரக்குற்றிகளை மீட்டுள்ளதாகவும் , அவற்றின் பெறுமதி சுமார் 10 இலட்ச ரூபாய் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






















