ஹோர்முஸ் நீரிணையை நெருங்கவோ நுழையவோ முயன்றால் - எச்சரிக்கும் ஈரான்
ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பு, இஸ்லாமிய குடியரசான ஈரானின் ஆயுதப் படைகளின் கைகளில் உள்ளது என்றும், எந்தவொரு சூழ்நிலையிலும் பாதுகாப்பான போக்குவரத்து மற்றும் கப்பல் வழிசெலுத்தல் ஆகியவை ஈரானிய ஆயுதப் படைகளின் ஒருங்கிணைப்புடனேயே மேற்கொள்ளப்படும் என்றும் ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.
ஹார்முஸில் சிக்கியுள்ள கப்பல்களை வெளியேற்றுவதற்காக ஒரு கடற்படைப் பணியைத் தொடங்கவுள்ளதாக டிரம்ப் அறிவித்திருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் ஊடகங்கள் வெளியிட்ட இந்த இராணுவ அறிக்கை அமைந்துள்ளது.
இப்பணிகள் அடுத்த சில மணிநேரங்களில் தொடங்கப்பட உள்ளன. "நாங்கள் எங்களது முழு பலத்துடன் ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பைப் பேணுவோம் மற்றும் நிர்வகிப்போம்.
அனைத்து வர்த்தகக் கப்பல்களும் மற்றும் எண்ணெய் தாங்கிக் கப்பல்களும் ஹார்முஸ் நீரிணையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஆயுதப் படைகளின் ஒருங்கிணைப்பு இன்றி பயணிக்க முயற்சிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
அவ்வாறு செய்வதன் மூலம் அவற்றின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படாமல் தவிர்க்கலாம் என ஈரான் இராணுவம் கூறியுள்ளது.
"எந்தவொரு வெளிநாட்டு ஆயுதப் படையும், குறிப்பாக ஆக்கிரமிப்பு அமெரிக்க இராணுவம், ஹோர்முஸ் நீரிணையை நெருங்கவோ அல்லது நுழையவோ முயன்றால் அவர்கள் தாக்குதலுக்கு உள்ளாவார்கள் என்று நாங்கள் எச்சரிக்கிறோம், என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.























